கும்பமேளா நிறைவு நாள்: இதுவரை 81 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!
உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சிவபெருமானுக்கு உகந்த ஒரு இரவாகக் கருதப்படும் இன்று மக்கள் அனைவரும் சிவாலயங்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவருகின்றனர். அந்தவகையில், கடந்த 45 நாள்களாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளா நிகழ்வில் கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் குவிந்துவருகின்றனர்.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகளும் ஒன்றாகச் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நிகழ்வு கடந்த ஜனவரி 13 முதல் நடைபெற்று வருகின்றது. கும்பமேளாவின் இறுதி நாளான இன்று இதுவரை 81 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர்.
கும்பமேளா தொடங்கியதிலிருந்து நாடு முழுவதிலும் இருந்து சாதுக்கள், நாக சாதுக்கள், சுற்றுலாப் பயணிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள், நடிகை, நடிகர்கள் என இதுவரை 65 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடிச் சென்றுள்ளனர்.
அரசு வெளியிட்ட தரவுகளின்படி, அதிகாலை 2 மணி வரை 11.66 லட்சம் பக்தர்களும், அடுத்த இரண்டு மணி நேரத்தில் 25.64 லட்சம் பக்தர்களும், காலை 6 மணி வரை 41,11 லட்சமும், அதேநேரத்தில் காலை 10 மணி வரை 81.09 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
கும்பமேளாவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆதியதநாத் கண்காணித்து வருகிறார். அதோடு ஞானிகள், கல்பவாசிகள், சிவபக்தர்கள் அனைவரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்தார்.