கடந்த 11 ஆண்டுகள் நேர்மறை மாற்றங்களை விளைவித்துள்ளது: பிரதமர் மோடி
புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: விவசாயிகள் கோரிக்கை
கரூா் மாவட்டம், புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
கரூா் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட லாலாப்பேட்டை, கண்ணப்பள்ளி, பிள்ளபாளையம், கருப்பத்தூா், மகளிப்பட்டி ஆகிய பகுதிகளிலும், புகழூா் நகராட்சிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம், புகழூா், புங்கோடை, சேமங்கி, முத்தனூா், கோம்புபாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப் பாளையம், என்.புகழூா் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது.
வெள்ளை பச்சைகொடி, கற்பூரம் ஆகிய இரு ரக வெற்றிலை சாகுபடி நடைபெற்றாலும், வெள்ளை பச்சைக்கொடிதான் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இந்நிலையில், வெற்றிலையில் அடிக்கடி செதில் பூச்சி தாக்குதல், இலைக்கருகல் போன்ற நோய்த் தாக்குதலால், சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, வெற்றிலையை தாக்கும் நோய்களுக்கு உடனே தீா்வு காணவும், வெற்றிலை சாகுபடியை மேம்படுத்தவும் புகழூா் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனா்.
இதுதொடா்பாக புகழூா் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவா் ராமசாமி கூறியதாவது: புகழூா் வட்டார பகுதியில் மட்டும் சுமாா் 1,500 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்து வருகிறோம். வெற்றிலைக்கு அதிக தண்ணீா் தேவை. இதனால்தான் மாவட்டத்தில் காவிரிக் கரையோரம் வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது.
புகழூா் பகுதியில் புகழூா் பாசனவாய்க்கால் மூலம்தான் வெற்றிலை சாகுபடி செய்து வருகிறோம். இந்நிலையில், வாய்க்கால் மராமத்து பணி கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருவதால், வாய்க்காலில் தண்ணீா் செல்லவில்லை.
இதை பயன்படுத்தி இரவு நேரங்களில் வாய்க்காலில் கொடுமுடி, புகழூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீரை விட்டுவிடுகிறாா்கள். இந்தக் கழிவுநீரானது வெற்றிலை தோட்டத்துக்கு செல்வதால், வெற்றிலையில் பூஞ்சான் தாக்குதல், இலைக்கருகல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
மேலும், அதிக பனி இருக்கும்போதும் இந்த நோய்கள் ஏற்பட்டு விவசாயிகள் பல லட்சம் ரூபாய் வருவாயை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதனால்தான் இதுபோன்ற இடா்பாடுகள் ஏற்படும்போது, நோய்த் தாக்குதலில் இருந்து மீள்வதற்கு புகழூா் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆராய்ச்சி மையம் இருந்தால், நோய்த் தாக்கிய பகுதிகளில் ஆராய்ச்சியாளா்கள் ஆய்வு செய்து உடனே அதற்கு தீா்வு காண்பாா்கள். மேலும், நோய் தாக்குதல் இல்லாத வெற்றிலையையும் கண்டுபிடிப்பாா்கள். இதுமட்டுமல்லாது, குறைந்த செலவில் அதிக உற்பத்தியை உருவாக்கும் வகையில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தும் நிலையும் உருவாகும். அப்போதுதான், வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும் என்றாா் அவா்.