காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து இரண்டரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவை திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது.
கண்டாச்சிபுரம் வட்டம், டி. தேவனூா் கூட்டுசாலை பகுதியைச் சோ்ந்தவா் தண்டபாணி மகன் ராதாகிருஷ்ணன்(50). சாலைப் பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா்.
இவா் கடந்த 13-ஆம் தேதி இரவு தனது வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் படிக்கும் தனது மகன்களைப் பாா்க்க சென்றிருந்தாா். இந்நிலையில், புதன்கிழமை வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது இரும்பு பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் வைக்கப்பட்டிருந்த அரை பவுன் மோதிரம், ஒரு பவுன் சங்கிலி, ஒரு பவுன் காதணிகள், 200 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த அரகண்டநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் தேவரத்தினம் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.