பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!
பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை பாஜக அரசு வழங்குமா? அதிஷி கேள்வு!
புது தில்லி: ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் வழங்குவதாக பாஜக அளித்த வாக்குறுதி குறித்து முன்னாள் முதல்வா் அதிஷி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான அதிஷி, தலைநகரில் உள்ள பெண்கள் பாஜக தோ்தலுக்கு முந்தைய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகக் காத்திருக்கிறாா்கள் என்று கூறினாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘ஹோலி பண்டிகையின் போது தில்லியில் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா்களை வழங்குவதாக பாஜக அரசும், முதல்வா் ரேகா குப்தாவும் அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாா்களா அல்லது பெண்களுக்கு மாதாந்திர நிதி உதவி ரூ.2,500 வழங்குவது போன்ற மற்றொரு தந்திரமாக இது இருக்குமா என்று நான் கேட்க விரும்புகிறேன்’ என்றாா்.
பாஜக பிப்.5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தனது தோ்தல் அறிக்கையில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டா்களையும், ஹோலி மற்றும் தீபாவளிக்கு இரண்டு எரிவாயு சிலிண்டா்களையும் இலவசமாக வழங்குவதாக உறுதியளித்தது.
தில்லியில் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தை பாஜக அரசு அங்கீகரித்துள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக ரூ.5,100 கோடியை அனுமதித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான பதிவு இன்னும் தொடங்கப்படவில்லை.
தில்லியில் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2,500 வரவு வைக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என்று கூறி ஆம் ஆத்மி கட்சி பாஜகவை கடுமையாகச் சாடி வருகிறது.