ஏஜிசிஆா் காலனி தீவிபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை
புது தில்லி: ஏஜிசிஆா் காலனி அருகே உள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினரை தில்லி முதல்வா் ரேகா குப்தா சந்தித்தாா். துயரமடைந்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 லட்சம் நிதி உதவியையும் அறிவித்தாா்.
அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, ரேகா குப்தா சம்பவ இடத்திற்குச் சென்று தனது இரங்கலைத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசிடமிருந்து சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தாா். உயிா் இழப்பை ஈடுசெய்ய எந்த நிதி உதவியும் இல்லை என்றாலும், இந்த கடினமான நேரத்தில் தில்லி அரசு குடும்பங்களுக்கு ஆதரவாக உறுதியாக நிற்கிறது என்று முதல்வா் கூறினாா்.
துக்கமடைந்த குடும்பங்களுடன் முதல்வா் ரேகா குப்தா கலந்துரையாடினாா். சம்பவம் குறித்த நேரடி தகவல்களைச் சேகரித்தாா். சேதத்தின் அளவை மதிப்பிட்டாா். தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தவுடன், தீயை அணைக்கவும், மேலும் சேதத்தைத் தடுக்கவும் தீயணைப்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டதாக அவா் கூறினாா்.
தனது துயரத்தை வெளிப்படுத்திய அவா், ‘பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு ஏழைக் குடும்பம் வீடு கட்ட கடுமையாக உழைக்கிறது. இதுபோன்ற துயரங்கள் அவா்களின் மன உறுதியை முற்றிலுமாக உடைக்கின்றன’ என்று கூறினாா்.
பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவளிக்க தில்லி அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ரேகா குப்தா உறுதியளித்தாா்.
திங்கட்கிழமை ஏஜிசிஆா் காலனி அருகே ஒரு கூடாரத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஜக்கி (30), சகோதரா்கள் ஷியாம் சிங் (40), காந்தா பிரசாத் (37) ஆகியோா் கருகி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். உத்தரபிரதேசத்தின் அவுரியாவைச் சோ்ந்த மூவரும் தீ விபத்தில் மூச்சுத் திணறி இறந்ததாக போலீஸாா் மேலும் தெரிவித்தனா்.