பேட் கேர்ள் டீசரை நீக்கக் கோரிய வழக்கு: கூகுள் பதிலளிக்க உத்தரவு!
பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசரை யூடியூப்பிலிருந்து நீக்கக் கோரிய வழக்கில் புதிய உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் அனுராக் காஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வழங்கும் பேட் கேர்ள் திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் குடியரசு நாளில் வெளியிடப்பட்டது.
முதன்மை கதாபாத்திரமான அஞ்சலி சிவராமன் உள்பட சாந்தி பிரியா, ஹிரிது ஹருண், டிஜே அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஒரு பெண்ணின் பள்ளி காதல் வாழ்க்கை, முதல் முத்தம், காதல், ஆசைகள், எதிர்பார்ப்புகளை வைத்து படம் நகர்வதாகத் தெரிகிறது.
இதையும் படிக்க: தள்ளிப்போகும் இட்லி கடை?
டீசரில் பேசப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள் பிராமணர்களை மோசமாக சித்திரிப்பதாகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக, இயக்குநர் மோகன் ஜி தன் அதிருபதியை சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.
இந்த நிலையில், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மூன்று பேர் பேட் கேர்ள் திரைப்பட டீசர் குழந்தைகளுக்கு எதிராகவும் சிறுமிகளை ஆபாசமாகக் காட்டுவதாகக் கூறி யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தனபால் மத்திய அரசு மற்றும் கூகுள் இந்தியா அதிகாரி டீசர் குறித்து பதிலளிக்க வேண்டுமென உத்தரவு அளித்து ஒருவாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்திருக்கிறார்.