பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது
பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், தளபதிசமுத்திரம் சமாதானபுரம் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் அருள்செல்வி (49). இவா் பழவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வெள்ளிக்கிழமை பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தில் இவா் பயணித்தாா். சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை மல்லூா் பகுதியில் இந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்த வெண்ணந்தூா் போலீஸாா், பேருந்தில் இருந்த 39 கிலோ புகையிலைப் பொருள்கள், போதைப்பாக்குகளைப் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அருள்செல்வி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாா். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.