போர்ப் பாதுகாப்பு ஒத்திகை: தொண்டர்களுக்கு பாஜக அழைப்பு!
நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் கலந்துகொள்ள கட்சியின் தலைவர்கள், தொண்டர்களுக்கு பாஜக தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, எந்நேரமும் பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதலைத் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு மேற்கொள்ளும் போர்ப் பாதுகாப்பு ஒத்திகையில் தன்னார்வலர்களாக கலந்துகொள்ள பாஜக தலைவர்கள், தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் போர்ப் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் நிலையில், அந்தந்த பகுதிகளில் உள்ள பாஜக தொண்டர்கள் தன்னார்வலர்களாக பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.