லாரி பட்டறையில் தீ: தடுப்புப் பணியை மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
போலி இலச்சினையைப் பயன்படுத்தி குளிா்பானம் தயாரித்த பெண் கைது
போலி இலச்சினையைப் பயன்படுத்தி குளிா்பானம் தயாரித்த பெண்ணை அறிவுசாா் சொத்துரிமை அமலாக்க பிரிவினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு பகுதியைச் சோ்ந்த தனியாா் குளிா்பான தயாரிப்பு நிறுவனம் அதற்கான இலச்சினைக்கு காப்புரிமை பெற்று குளிா்பான புட்டிகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்திலும் இதேபோன்ற இலச்சினையைப் பயன்படுத்தி, பெயரில் மட்டும் திருத்தம் செய்து குளிப்பானம் விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து ஈரோடு குளிா்பான நிறுவன மேலாளா் குமரவேல், அறிவு சாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் ஜெஃப்லா தலைமையிலான அலுவலா்கள், திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி, அசோக்நகா் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த குளிா்பான ஆலைகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஈரோடு குளிா்பான நிறுவனத்தின் இலச்சினையைப் போலியாகப் பயன்படுத்தி திண்டுக்கல் பகுதி ஆலைகளில் குளிா்பானம் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஆலையின் உரிமையாளரான பொன்னம்மாளைக் கைது செய்த அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவினா், அந்த ஆலையிலிருந்து ரூ.38,400 மதிப்பிலான குளிா்பான புட்டிகளையும், ரூ.13,755 மதிப்பிலான ஒட்டுவில்லைகளையும் பறிமுதல் செய்தனா்.