Rain Alert: கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விட...
மகாராஷ்டிரா: "செலவு ரூ.66,000; ஆனால் கிடைத்தது ரூ.664" - கண்ணீர் வடிக்கும் வெங்காய விவசாயி
நாட்டில் வெங்காய விளைச்சல் அதிகமுள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. இந்த வெங்காயம் மகாராஷ்டிராவின் புனே, நாசிக், சோலாப்பூர் மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
மகாராஷ்டிரா வெங்காயம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் வெங்காயம் விலை மிகவும் வீழ்ச்சியடைந்து விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு பருவ மழை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடியாமல் கூடுதல் நாள்கள் பெய்தது. கடைசி நாட்களில் அதிக அளவு பருவ மழை பெய்ததால் வெங்காய விவசாயிகள் கடுமையான இழப்பைச் சந்தித்தனர்.
நட்ட வெங்காய நாற்றுக்கள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டது. அதோடு வெங்காய விளைச்சலும் மிகவும் குறைவாகவும், விளைந்த வெங்காயம் தரம் குறைந்ததாகவும் இருக்கிறது.

புனே அருகில் உள்ள புரந்தர் என்ற இடத்தைச் சேர்ந்த விவசாயி சுதாம் இங்க்ளே என்பவர் தனது தோட்டத்தில் 2.5 ஏக்கர் அளவுக்கு வெங்காயம் பயிரிட்டு இருந்தார். அதில் மழையால் அதிக அளவில் விளைச்சல் பாதிக்கப்பட்டது. முதல் கட்டமாக ஒரு ஏக்கர் பரப்பில் இருந்த வெங்காயத்தை அறுவடை செய்தார்.
அதில் அவருக்கு வெறும் 7.5 குவிண்டால் வெங்காயம் மட்டும்தான் கிடைத்தது. அந்த வெங்காயத்தை ரூ.1500 செலவுசெய்து புனே மார்க்கெட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் மார்க்கெட்டில் அவரது வெங்காயம் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி மிகவும் குறைந்த விலைக்கே விற்கப்பட்டது.
வெங்காயத்தை ஏலம் மூலம் விற்பனை செய்ததில் வியாபார செலவு போக விவசாயிக்கு 664 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். இந்தத் தொகையைப் பார்த்து விவசாயி சுதாம் கண்ணீர் வடிக்கும் நிலைக்குச் சென்றார்.
இது குறித்து அவர் கூறுகையில், ''நான் இந்தச் சீசனில் வெங்காய விவசாயத்திற்கு ரூ.66 ஆயிரம் செலவு செய்தேன். அதில் ஒரு ஏக்கர் மட்டும் அறுவடை செய்தேன். ஆனால் அதில் எனக்குக் கிடைத்த 7.5 குவிண்டால் வெங்காயத்திற்கு ரூ.664 மட்டுமே கிடைத்தது.
என்னிடம் இன்னும் 1.5 ஏக்கர் அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அதனை நான் அறுவடை செய்யப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். அதனை அப்படியே உழவு உழுதுவிட முடிவு செய்துள்ளேன். இது எனது அடுத்த விவசாயத்திற்கு உரமாக அமையும்.
வெங்காயத்தை அறுவடை செய்வதை விட இப்படி உழவு உழுவதுதான் எனக்கு லாபமாகத் தெரிகிறது. சிறு விவசாயிகள் பலர் கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளனர். அவர்களால் எப்படி நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று தெரியவில்லை. அரசு இதில் தலையிடவில்லையெனில் தற்கொலைகள் அதிகரிக்கும்'' என்று தெரிவித்தார்.
இங்கிளேவின் கதை போன்று மகாராஷ்டிராவில் பல விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடைவிடாத மழை மற்றும் விலை சரிவு போன்றவை விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு முதல் மாதுளை, சீத்தாப்பழம் மற்றும் சோயாபீன்ஸ் வரை, கிட்டத்தட்ட அனைத்து பயிர்களும் இந்த வருட பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த ஆண்டு விவசாயிகளின் கையில் பணம் இல்லை. எனவே விவசாயிகளால் இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாட முடியவில்லை என்றும் நகரங்களில் மட்டும்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றும், விளக்கு வாங்கக்கூட விவசாயிகளிடம் பணம் இல்லை என்றும் விவசாயிகள் ஆதங்கப்பட்டனர். ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்காவ் மார்க்கெட்டில், வெங்காய விலை குவிண்டாலுக்கு ரூ.500 முதல் ரூ.1,400 வரை உள்ளது.

மாணிக்ராவ் என்ற விவசாயி இது குறித்து கூறுகையில், "சந்தை விலையைப் பார்த்து நான் என் வெங்காயப் பயிரை அறுவடை செய்யாமல் ரொடேடர் மூலம் உழவடித்துவிட்டேன். இது குறைந்தபட்சம் வயலை உரமாக்க உதவும். அதை அறுவடை செய்து விற்பது எனது இழப்பை அதிகரிக்கும்.
இந்த ஆண்டு மாதுளை பண்ணையில் ரூ. 1.5 லட்சம் முதலீடு செய்தேன், ஆனால் மழை காரணமாக, செடிகள் கருப்பாக மாறிவிட்டன. அதனால் நான் அவற்றைக் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் நட்ட 500 சீதாப்பழ மரக்கன்றுகளுக்கும் இதுவே நடந்தது. இதற்கு எனக்கு சுமார் ரூ. 1 லட்சம் செலவானது'' என்று கவலையுடன் தெரிவித்தார்.