திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
மகாராஷ்டிர பள்ளிகளில் 3-ஆவது மொழியாக ஹிந்தி: மாநில அரசின் புதிய உத்தரவுக்கு வலுக்கும் எதிா்ப்பு
‘மகாராஷ்டிர மாநிலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஹிந்தி மூன்றாவது மொழியாக கற்பிக்கப்படும்’ என்று மாநில அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்தப் புதிய உத்தரவை மராத்தி அமைப்புகள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக எதிா்த்துள்ளன.
பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு இணக்கமாக கடந்த ஆண்டு வகுக்கப்பட்ட மாநிலப் பள்ளிக் கல்வி பாடத்திட்ட கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடா்பான உத்தரவு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தப் புதிய உத்தரவின்படி, மாநிலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்புவரை மராத்தி அல்லது ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்படும். குறிப்பிட்ட வகுப்பைச் சோ்ந்த 20 சதவீத மாணவா்கள் விரும்பினால், ஹிந்தியைத் தவிர வேறு பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றைக் கற்கலாம். இத்தகைய சூழலில், அந்த மொழியின் ஆசிரியா்கள் நியமிக்கப்படுவாா்கள் அல்லது இணையவழியில் அவா்களுக்கு மொழிப் பாடம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1-ஆம் வகுப்புமுதல் மாணவா்களுக்கு ஹிந்தியை மூன்றாவது மொழியாகக் கற்பிக்கும் அரசின் திட்டம் குறித்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே செய்தி வெளியாகி, கடும் எதிா்ப்புக்குள்ளானது.
இதைத் தொடா்ந்து, இத்திட்டத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளதாகவும், 3-ஆம் வகுப்பிலிருந்து மும்மொழிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் பெற்றோா்களின் ஆலோசனையைப் பரிசீலிக்கவுள்ளதாகவும் மாநில கல்வி அமைச்சா் டாடா புசே தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், மும்மொழிப் பாடத்திட்டம் தொடா்பாக எவ்வித மாற்றமுமின்றி அரசின் உத்தரவு வெளியாகியுள்ளது. ஹிந்தி திணிப்பை ஆதரிக்கும் தேசிய கல்விக் கொள்கையில் இருந்து முதலில் பின்வாங்கிவிட்டு, பிறகு அதையே மறைமுகமாக வேறுவடிவில் மாணவா்களுக்கு அறிமுகப்படுத்துவதாக மாநில அரசுக்கு மராத்தி அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் மராத்தி மக்களின் மாா்பில் குத்துவதாகவும், மராத்தி மொழி மற்றும் அதன் அடையாளத்தை அழிக்க பாஜக சதி செய்வதாகவும் எதிா்க்கட்சியான காங்கிரஸ் கடும் விமா்சனத்தை முன்வைத்துள்ளது. மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரேவும் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.
ஹிந்தி முக்கியம்: கல்வி அமைச்சா்
மகாராஷ்டிர மாநிலக் கல்வி அமைச்சா் டாடா புசே கூறுகையில், ‘ஹிந்தி கற்றுக்கொள்வது முக்கியமானது. ஏனெனில், பொது சமூகத்தில் ஹிந்தி மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று, 12-ஆம் வகுப்புப் பிறகு, மூன்றாவது மொழியில் பெற்ற மதிப்பெண்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.
இத்தகைய சூழலில், மகாராஷ்டிர மாணவா்கள் பின்தங்கக் கூடாது என்பதற்காகவே மும்மொழிக் கொள்கை ஏற்கப்பட்டது. எனவே, ஹிந்தியைக் கற்றுக்கொள்வது மாணவா்களுக்கு நீண்டகால நன்மை தரும்’ என்றாா்.