மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
2024-25-ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுக்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘மீண்டும் மஞ்சப்பை‘ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஆண்டுதோறும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு ‘மஞ்சப்பை விருதுகள்‘ வழங்கப்படும் அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களான பிளாஸ்டிக் கைப் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணி பை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள், 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும். விருதுடன் முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்திலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபா் / நிறுவனத் தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுந்தகடு பிரதிகள் இரண்டினை திருநெல்வேலிமாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 1-ஆகும்.