மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்குபூஜை; நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இங்கு அம்மன் புற்றுவடிவில் காட்சி அருளுகிறார். கடற்கரையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கேரளாவைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 41 நாள்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிவந்து அம்மனை தரிசிப்பார்கள்.

இருமுடியில் அம்மனுக்கு பொங்கலிட தேவையான பொருள்களை வைத்திருப்பார்கள். அம்மனை தரிசித்தபின் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர். இக்கோயிலில் மாசி கொடைவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை வலியபடுக்கை பூஜைகள் நடைபெற்றன.
10-ம் நாள் விழாவான நேற்று நள்ளிரவு அம்மனுக்கு சோறூட்டும் ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்திலும், கோயிலுக்கு முன்பு உள்ள சாலையிலும் திரண்டிருந்தனர். அம்மனுக்கு படைக்கப்படும் உணவு பதார்த்தங்கள் பகவதி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள சாஸ்தா கோயில் வளாகத்தில் தயார் செய்யப்பட்டு பானைகளில் எடுத்துவரப்பட்டன. பானைகளின் மீது நீளமான ஒற்றை வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்தது.

சாஸ்தா கோயில் வளாகத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பவனி தொடங்கி சுமார் அரை மணி நேரமாக மெதுவாக கோயிலை சென்றடைந்தது. அப்போது அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தாலும் நிசப்தமாக அமைதியாக இருந்தது. இது ஆண்டுதோறும் நடக்கும் அதிசயமாகும். உணவு பதார்த்தங்கள் கோயில் மூலஸ்தானத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோயிலில் கொடி இறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு படைக்கப்பட்ட உணவு வகைகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
