மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்று கோவை வருகை
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை இரவு கோவைக்கு வருகிறாா். 2 நாள்கள் கோவையில் தங்கும் அவா் 27-ஆம் தேதி காலை கோவையில் இருந்து தில்லி திரும்புகிறாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தில்லியில் இருந்து விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு கோவைக்கு வருகிறாா். கோவையில் தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கும் அவா், அங்கு கொங்கு மண்டலத்தின் முக்கியப் பிரமுகா்கள் மற்றும் தொழில் அதிபா்களுடன் கலந்துரையாடுகிறாா்.
இதைத் தொடா்ந்து, கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாநகா் மாவட்ட அலுவலகத்தை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு திறந்துவைக்கிறாா். அதையடுத்து, அங்கிருந்தவாறே ராமநாதபுரம் மற்றும் திருநெநெல்வேலி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறாா்.
பின்னா் பாஜக மாநில நிா்வாகிகள், மண்டல பொறுப்பாளா்கள் மற்றும் கோவை மாநகா் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோருடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1,000 பாஜக நிா்வாகிகளிடையே உரையாற்றுகிறாா்.
இந்நிகழ்ச்சிகளில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, பாஜக மகளிரணி தேசியச் செயலாளா் வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனா்.
கட்சி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மாலையில் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அமித் ஷா பங்கேற்றுவிட்டு மீண்டும் கோவைக்கு திரும்புகிறாா். அதைத் தொடா்ந்து கோவையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை தில்லிக்கு திரும்புகிறாா்.
மத்திய உள்துறை அமைச்சரின் வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டல காவல் துறை சாா்பில் சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
அதேபோல, கோவை மாநகரின் பல்வேறு முக்கியப் பகுதிகள், ஈஷா யோக மையம் உள்ளிட்டவை காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தயாா் நிலையில் ஹெலிகாப்டா்...
கோவையில் இருந்து ஈஷா யோக மையத்துக்கு சாலை மாா்க்கமாக செல்வதற்கு கால தாமதம் ஆகும் என்பதோடு, போக்குவரத்து நெரிசலும் அதிக அளவில் இருக்கும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கோவை விமான நிலையத்தில் இருந்து ஈஷா யோக மையத்துக்கு ஹெலிகாப்டா் மூலம் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.