மயோனைஸ் வடிவில் விஷம்.. தடை விதிக்கும் அளவுக்கு ஆபத்தா?
அசைவப் பிரியர்களோ, சைவப் பிரியர்களோ, மயோனைஸ் பிரியர்கள் ஏராளம். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழகத்தில் மயோனைஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பர்கராக இருக்கட்டும், சிக்கன் 65 ஆக இருக்கட்டும் அதன் ருசியை அதிக ருசியாக்குவது இந்த மயோனைஸ்தான். பலரும் கூடுதலாக மயோனைஸ் கேட்டு, அதற்கு தனியா பில் போடப்படும் என்று சொன்னாலும் கூட, கொண்டுவரச்சொல்லி சாப்பிட்டு மகிழ்ந்துவந்த மயோனைஸ் பின்னணியில் இத்தனை ஆபத்துகள் இருக்கிறதா? தடை விதிக்கும் அளவுக்கு என்றுதான் பலரும் ஆச்சரியப்பட்டிருப்பார்கள் தடை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்து.
உண்மையில் மயோனைஸ் செய்வது மிகவும் எளிது, ஒரு மிக்ஸியில் பச்சை முட்டையை உடைத்து ஊற்றி அதில் ஒரு கப் ரீஃபைன்டு எண்ணெய் ஊற்றி, மிக்ஸியை சுழற்றினால் ஒரு நொடியில் தயாராகிவிடும் இது. ஆனால், இதனால் உடலுக்கு ஏற்படும் தீங்குகளோ பல காலம் ஆகும் சரியாக என்கிறார்கள் மருத்துவர்கள்.
வேகவைக்கப்படாத முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் பல நாள்கள் வரை வைத்திருந்து சாப்பிடும்போது அதனால், உடலில் பல மோசமான கிருமித் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருக்கிறதாம்.
ஒருவேளை நாள்பட்ட மையோனைஸ் சாப்பிடும்போது, அதிலிருக்கும் கிருமிகள், உடலில் பல்கிப்பெருகி பெரும் ஆபத்தை விளைவிக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல,
மயோனைஸ் சாப்பிட்டதும் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதையே நாள்தோறும் சாப்பிடும்போது நீரிழிவு ஏற்படவும், நீரிழிவு நோயாளியாக இருப்பின் இது உடல்நிலையை மிக மோசமாக பாதிக்கவும் அபாயம் இருக்கிறது.
உடல் எடை
அதிக மையோனைஸ் சாப்பிடுபவர்களின் உடல் எடை கடுமையாக அதிகரிக்குமாம்.மையோனைஸில் அதிகக் கலோரிகள் இருக்கிறதாம். கொழுப்பும் அதிகம் இருக்கிறது. இதனால் உடல் எடை குறிப்பாக தொப்பை அதிகரிக்கும்.
ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் பிரச்னை இருப்பவர்கள் மயோனைஸ் சாப்பிடுவது ஆபத்து. சூடுபடுத்தப்படாத பச்சை எண்ணெய் பயன்படுத்தப்படுவதால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதய நோய் அபாயம்
ஒரு டேபிள்ஸ்பூன் மையோனைஸில் 1.6 கிராம் கொழுப்பு இருக்கிறது என்றும், இதனால் உடலில் கொழுப்பு அதிகரித்து அது இதய நோய்க்கு வழிவகுத்துவிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.