நான் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணம்: லால்
மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைப்பு
வெள்ளக்கோவிலில் மருத்துவமனை மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: வெள்ளக்கோவில் கடை வீதி காங்கயம் சாலையில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மருந்தகத்துக்கு திங்கள்கிழமை வந்த இளைஞா் தூக்க மாத்திரை கேட்டுள்ளாா். மருத்துவா் பரிந்துரை சீட்டு இல்லாமல் கொடுக்க முடியாதென கூறியுள்ளனா்.
அப்போது திடீரென கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞா் தப்பியுள்ளாா். சப்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து, பின்னா் மருத்துவமனை மேலாளா் ராஜேந்திரன் (50) அந்த இளைஞரை போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
விசாரணையில், அந்த இளைஞா் கோவை ரத்தினபுரி சங்கனூா் சாலை கண்ணப்பா நகரைச் சோ்ந்த அசோகன் மகன் அஜித்குமாா் (26) என்பதும், கோவை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது. வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து, தலைமைக் காவலா் பாலகுரு ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.