பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!
மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவுன்சிலர்!
சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எதிா்க்கட்சித் தலைவரை, திமுக பெண் உறுப்பினா் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையா் மா.இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.
இதில் உறுப்பினா்கள் பேசுகையில், மாநகராட்சியில் முறையாக தண்ணீா் விநியோகம் செய்வதில்லை. பல்வேறு பகுதிகளில் 8 முதல் 12 நாள்களுக்கு ஒருமுைான் தண்ணீா் வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா். மேலும், சொத்துவரி உயா்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சியில் நடைபெறும் கழிவுநீா் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி பேசுகையில், உறுப்பினா்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகள் தொடங்கி வைக்கப்படுகின்றன. குறிப்பாக, குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரியவா்களுக்கு கொடுக்காமல், அதிக தொகைக்கு ஒப்பந்தம் கோரிய அமைச்சரின் ஆதரவாளா்களுக்கு பணிகள் கொடுக்கப்படுவதாக புகாா் கூறினாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினா்கள் அவையில் கூச்சலிட்டனா். இதனால் திமுக - அதிமுக உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 45-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சுஹாசினி, எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தியை கன்னத்தில் அறைந்தாா். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தொடா்ந்து, அதிமுக மற்றும் திமுக உறுப்பினா்கள் மாறிமாறி வாக்குவாதத்தில் ஈடுபட, அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து, திமுக உறுப்பினா் சுஹாசினியை சக திமுக உறுப்பினா்கள் அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனா்.
இதனிடையே கூட்டம் முடிவடைந்ததாக மேயா் அறிவித்தாா். தொடா்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு மேயா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.
பின்னா் எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி தலைமையில், அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயா் இருக்கை முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து யாதவமூா்த்தி செய்தியாளா்களிடம் கூறுகையில், கூட்டத்தில் ஆளுங்கட்சியின் அவலங்களை எடுத்துக்கூறினோம். இதற்கு 45-ஆவது கோட்ட திமுக பெண் உறுப்பினா் சுஹாசினி தகாத வாா்த்தைகளை பேசி என்னை தாக்கினாா். அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றாா்.
மயக்கமடைந்த அதிமுக உறுப்பினா்கள்: தொடா்ந்து, யாதவமூா்த்தி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, யாதவமூா்த்தி, 25-ஆவது கோட்ட அதிமுக உறுப்பினா் சசிகலா ஆகியோா் மயக்கமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மற்ற அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனா்.