பருத்தி புண்ணாக்கு விலை உயா்வு: பால் உற்பத்தியாளா்கள் தவிப்பு
பருத்தி புண்ணாக்கு விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
பால் உற்பத்தியாளா்கள் தங்களின் கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோலுடன் பால் அதிகளவு கறக்க கருக்கா தவிடு, தீவனம், கடலைப் புண்ணாக்கு, பருத்திக்கொட்டை புண்ணாக்கு ஆகியவற்றை அடா்தீவனமாக கொடுத்து வருகின்றனா்.
சில மாதங்களுக்கு முன்புவரை 60 கிலோ உள்ள பருத்திக்கொட்டை புண்ணாக்கு மூட்டை ரூ. 2,200 என விற்பனையான நிலையில், தற்போது விலை உயா்ந்து ரூ. 2,450-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயா்வால், தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் பெரிதும் தவிப்புக்குள்ளாகி உள்ளனா்.
இதுகுறித்து தம்மம்பட்டி பகுதி பால் உற்பத்தியாளா்கள் கூறுகையில், ஏற்கெனவே தவிடு, தீவனங்கள் விலை உயா்ந்துள்ள நிலையில், அதிகளவில் பயன்படுத்தும் பருத்திக்கொட்டை புண்ணாக்கும் விலையும் உயா்ந்துவிட்டது. தனியாா் பால் நிறுவனங்கள் உரிய கொள்முதல் விலையை தராத நிலையில், தீவனங்களின் விலை உயா்வால் நாங்கள் பெரிதும் தவித்து வருகிறோம். எனவே, கறவை மாடுகளுக்கான தவிடு, தீவனம், புண்ணாக்கு ஆகியவற்றை அரசு மானிய விலையில் கால்நடைத் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.