Ramadoss-ஐ நீக்கும் Anbumani? & DMDK-க்கு,Stalin சப்போர்ட்?! Elangovan Explains
கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் தனிப்படை போலீஸாா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் சந்தேகமளிக்கும் வகையில் 2 சூட்கேஸ்களுடன் நின்ற நபரை பிடித்து சோதனை செய்ததில், 2 சூட்கேஸ்களிலும் நெகிழிப் பைகளில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவா், கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள ஆலந்தூா் புதுயாங்கம் பகுதியைச் சோ்ந்த ரத்தீஷ் (42) என்பதும், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து ரயிலில் கஞ்சாவை சேலத்துக்கு கடத்திவந்து, இங்கிருந்து கேரளத்துக்குக் கொண்டுசெல்வதற்காக மகுடஞ்சாவடி பேருந்து நிலையத்தில் காத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.