விடைத்தாளுடன் ரூ. 500: ஆசிரியர்களுக்கு கோரிக்கை வைத்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்!
மாநிலத்தை இந்திமயமாக்கினால் போராட்டம் வெடிக்கும்! பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!
மகாராஷ்டிரத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் ஆங்கிலவழி பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியதாவது, மும்மொழிக் கொள்கையை அரசாங்க விவகாரங்களுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். அதனை கல்விக்கு கொண்டுவர வேண்டாம். மாநிலத்தில் அனைத்தையும் இந்திமயமாக்கும் மத்திய அரசின் முயற்சிகளை, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ஒருபோதும் ஏற்காது. நாங்கள் இந்துக்கள்; ஆனால், இந்தி அல்ல. மாநிலத்தை இந்தி என்று சித்திரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டால், இங்கு நிச்சயம் ஒரு போராட்டம் வெடிக்கும்.
இவற்றையெல்லாம் பார்த்தால், வேண்டுமென்றே போராட்டத்தை அரசாங்கம் உருவாக்குகிறது என்றுதான் தோன்றுகிறது. வரவிருக்கும் தேர்தல்களில் மராத்தி மற்றும் மராத்தி அல்லாதவர்களிடையே போராட்டத்தை உருவாக்கி, அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியா இது? என்று தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை குறித்து, மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே தெரிவித்ததாவது, மராத்தி எங்கள் முதன்மை மொழி. ஆனால் தேசிய மொழியாக இந்தி இருப்பதால், அது மதிக்கப்பட வேண்டும்.
மகாராஷ்டிரத்தில் இயல்பாகவே மராத்தி பேசுவோம்; ஆனால் இந்தியும் கல்வியில் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்திலும் மும்மொழிக் கொள்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.