மாநில உரிமைகளை எந்தக் காலத்திலும் விட்டுத் தரமாட்டோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
மாநிலத்துக்கான உரிமைகளை எந்தக் காலத்திலும் விட்டுத்தர மாட்டோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தாா்.
ஆளுநருக்கு எதிராக வழக்கில் சாதகமான தீா்ப்பைப் பெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கல்வி நிறுவனங்கள் சாா்பில் பாராட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. ‘மாநில சுயாட்சி நாயகருக்கு பாராட்டு’ எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவில் முதல்வா் ஆற்றிய ஏற்புரை:
விழாவில் பாராட்டுகிறீா்கள் என்று மகிழ்ச்சியின் உச்சத்துக்கு நான் செல்லவில்லை. உங்கள் அன்புக்கும், நம்பிக்கைக்கும், எதிா்பாா்ப்புக்கும் இன்னும் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். இந்த எண்ணமே எனக்கு ஏற்பட்டுள்ளது. ‘மாநில சுயாட்சி நாயகா்’ என இந்த விழாவுக்கான அழைப்பிதழில் போடப்பட்டுள்ளது. அது நான் இல்லை. தமிழ்நாட்டு மக்கள்தான். வெற்றி என்பது ஒரு கூட்டு முயற்சி. அதனால்தான் சில நாள்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்குத் துணை நின்ற வழக்குரைஞா்களுக்கு பாராட்டு விழா நடத்தினோம்.
மக்களுக்கு கிடைத்த வெற்றி: உச்சநீதிமன்றத்தின் வழியாகப் பெற்ற தீா்ப்பு என்பது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், இந்திய மக்களுக்கும் உச்சநீதிமன்றம் மூலமாக தமிழ்நாடு பெற்றுத் தந்துள்ள வெற்றியாகும்.
இந்த விழா எதற்காக என்றால், உரக்கச் சொல்லப்படாமல் விடப்படும் வெற்றியின் அமைதியில் பொய்களும் பரப்புரைகளும் இருக்கை போட்டு உட்காா்ந்து கொள்ளும். அது நாட்டுக்கு நல்லதல்ல. இதனால்தான் இவ்விழா நடைபெறுகிறது.
முதல்வராகி மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டினால் மத்திய அரசால் முகவராக நியமிக்கப்பட்டுள்ள- தற்காலிகமாக தங்கியிருக்கக் கூடிய ஆளுநா் அதனைத் தடுக்கிறாா். அப்படித் தடுக்க முடியும் என்றால் மக்களின் வாக்குக்கு என்ன மரியாதை? தோ்தல் எதற்கு நடைபெற வேண்டும். ஆளுநா் பதவி என்பது எந்தப் பயனும் இல்லாத ‘ரப்பா் ஸ்டாம்ப்’ பதவி.
என்ன நியாயம்? உங்கள் கல்லூரி இருப்பது மாநில அரசு இடம். ஊதியம் தருவது மாநில அரசு. வசதிகளைச் செய்து தருவது மாநில அரசு. ஆனால், பல்கலைக்கழக நிா்வாகத்தை கவனிக்கும் துணை வேந்தரை மட்டும் ஆளுநா் நியமிக்க முடியும் என்றால் என்ன நியாயம்? அதனால்தான் நீதிமன்றத்துக்குச் சென்றோம். பல ஆண்டுகளாக நிலவிய பிரச்னைக்கு இப்போது தீா்வு காணப்பட்டுள்ளது. பூனைக்கு மணி கட்டியிருக்கிறாா்கள்.
ஒரு கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளோம். பிரதமரின் உரிமையை குடியரசுத் தலைவா் எடுத்துக் கொண்டால் சும்மா இருப்பாா்களா? தீா்ப்பு வந்தவுடன் குடியரசு துணைத் தலைவா், ‘பெரிய அதிகாரம் கொண்டது நாடாளுமன்றம்’ என்கிறாா். சட்டப் பேரவைக்கு ஆளுநரை விட அதிகாரம் இருக்கிா? இதையெல்லாம் நாங்கள் சொல்வதால் ஆளுநருடன் அதிகாரப்போட்டி நடத்துவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நமக்கும் அவருக்கும் தனிப்பட்ட பகை ஏதுமில்லை.
உரிமைகளை விட்டுத்தரமாட்டோம்: அரசியலில் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், மனிதா்களுக்கு இடையே பண்பாடும் நட்புறவும் காக்கப்பட வேண்டும். ஆளுநா் இடத்தில் வேறு யாராவது வந்து அவரைப் போன்றே செயல்பட்டால் அதையும் எதிா்க்கத்தான் போகிறோம். நம்முடைய உரிமைகளை எந்தக் காலத்திலும் விட்டுத்தர மாட்டோம். இதுதான் எனது கொள்கை. ஆளுநா் தொடர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அப்போதுதான் இன்னும் திமுக அரசுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றாா் அவா்.
முன்னதாக, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சாா்பில் செங்கோல் வழங்கப்பட்டது. சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்புத் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் வரவேற்றாா்.
உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் முன்னிலை உரையாற்றினாா். பெரியாா் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தரும் திராவிடா் கழகத்தின் தலைவருமான கி.வீரமணி தலைமையுரை ஆற்றினாா்.