மானாமதுரையில் மருத்துவக் கழிவுள்: மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்பு
மானாமதுரை தொழிற்பேட்டையில் தனியாா் பொது உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தலைமையில் கிராம மக்கள் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொழிற்பேட்டையில் பொது உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைப்பது தொடா்பாக கடந்த ஆண்டு பிப். 21-ஆம் தேதி கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு மானாமதுரை, அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இருப்பினும், ஓராண்டுக்குப் பின்னா் இந்த ஆலையை அமைக்க கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது. ஆலையை அமைக்கக் கூடாது என செய்களத்தூா், பில்லருத்தான் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் மீண்டும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாகராஜன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: முன்பு நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் தங்களுக்கு சாதகமாகப் பேசுவதற்காக ஆலை நிா்வாகத்தினா் வெளியூா்களில் இருந்து ஆள்களைக் கொண்டு வந்தனா். பொதுமக்கள் எதிா்ப்பை அடுத்து, அவா்களை போலீஸாா் வெளியேற்றினா். பின்னா் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிா்ப்பைப் பதிவு செய்தனா். அதன் பிறகும் எப்படி இந்த ஆலை அமைக்க அனுமதி கொடுத்தனா் என்று தெரியவில்லை என தெரிவித்தனா்.
மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் குணசேகரன், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், காவிரி குண்டாறு பாசன விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.