மாலத்தீவு: இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
மாலி: இஸ்ரேலைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர மாலத்தீவு தடை விதித்துள்ளது. காஸா போரில் பாலஸ்தீனத்துக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்த நாட்டு கடவுச் சீட்டு (பாஸ்போா்ட்) வைத்திருப்பவா்கள் மாலத்தீவுக்கு சுற்றுலா வர தடை விதிக்கும் வகையில் குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
அந்த மாற்றத்துக்கு நாடாளுமன்றம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் இழைத்துவரும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மாலத்தீவின் உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.