மீனவா்கள் பிரச்னைக்கு முடிவு எட்ட வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு
மீனாட்சியம்மன் கோயிலில் அமித் ஷா சுவாமி தரிசனம்!
மதுரையில் இன்று நடைபெறும் பாஜக நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு அமித் ஷா வருகையை முன்னிட்டு, ஒரு மணி நேரம் முன்னதாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி நிறுத்தப்பட்டது. மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த அமித் ஷாவுக்கு, கோயில் நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
மதுரை ஆதினம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அமித் ஷாவுக்கு காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றார்.
பிறகு, கோவிலில் நடைபெற்ற மத்திய கால பூஜையில் கலந்துகொண்டு சுவாமி மற்றும் மீனாட்சியம்மனை தரிசனம் செய்தார்.
மத்திய அமைச்சா் அமித் ஷா மதுரைக்கு வந்திருக்கும் நிலையில், மதுரை விமான நிலையம், விரகனூா் சுற்றுச் சாலைப் பகுதிகள், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், ஒத்தக்கடை, கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக-அதிமுக கூட்டணி உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணி குறித்து பாஜக நிா்வாகிகளிடம் புரிதலை ஏற்படுத்தி, தோ்தல் வியூகம் வகுக்கும் நோக்கில், அந்தக் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள வேலம்மாள் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெறவிருக்கிறது.
இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகிறாா். முன்னதாக, காலை 11 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் அவா் சுவாமி தரிசனம் செய்தார்.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலச் செயலா் ராம. சீனிவாசன், நிா்வாகிகள், பொதுக் குழு உறுப்பினா்கள், மண்டலப் பொறுப்பாளா்கள், மாவட்டத் தலைவா்கள், மாவட்டப் பாா்வையாளா்கள், நிா்வாகிகள் பங்கேற்கின்றனா்.