‘Vijay - BJP கூட்டணி’ இதை சொல்வதில் எனக்கு வெட்கமில்லை - Tamilisai Soundararajan...
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பறிமுதல் செய்த `தாவூத் இப்ராகிம் சொத்துகள்' மீண்டும் ஏலம்
மும்பையில் 1993ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குக் காரணமான தாவூத் இப்ராகிம் இப்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். அவனை இந்தியாவிற்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை.
அதேசமயம் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள தாவூத் இப்ராகிம் குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துகளை மத்திய அரசு பறிமுதல் செய்து இருக்கிறது.

மும்பையில் உள்ள சொத்துக்கள் ஏற்கெனவே ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. ஆனால் தாவூத் இப்ராகிம் சொந்த ஊரில் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது குடும்பத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் இன்னும் பாதி விற்பனையாகாமல் இருக்கின்றன.
மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பாகே என்ற கிராமத்தில் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது குடும்பத்திற்கு 4 சொத்துக்கள் இருந்தன. அதனை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.
இதில் கடந்த ஆண்டு 4 சொத்துகளும் ஏலம் விடப்பட்டன. இதில் தாவூத் இப்ராகிம் தாயார் பெயரில் இருந்த இரண்டு சொத்துக்கள் மட்டும் ஏலம் போயின.
டெல்லியை சேர்ந்த அஜய் என்பவர் அவற்றை ஏலம் எடுத்தார். அதில் ஒரு சொத்துக்கான ரூ.3.28 லட்சத்தைச் செலுத்திய வழக்கறிஞர் அஜய் மற்றொரு பிளாட்டை ஏலத்தில் எடுத்துவிட்டு அதற்கான பணத்தைச் செலுத்தவில்லை.

அந்தச் சொத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையில் இருந்து 1300 மடங்கு அதிக விலையில் கேட்டிருந்தார். அதாவது 171 சதுர மீட்டர் விவசாய நிலத்தை ரூ.2.01 கோடிக்கு கேட்டிருந்தார். ஆனால், அரசு அந்த நிலத்திற்கு ரூ.15440 விலை நிர்ணயம் செய்திருந்தது.
இதனால் அதற்கான தொகை ரூ.2.01 கோடியை அவரால் செலுத்த முடியவில்லை. மற்ற இரண்டு சொத்துகளை ஏலத்தில் யாரும் கேட்கவில்லை. இதையடுத்து அந்தச் சொத்துக்கள் மீண்டும் ஏலத்திற்கு வருகின்றன.
4 சொத்துக்கள் இப்போது ஏலம் விடப்பட இருக்கின்றன. ஏற்கெனவே ஏலம் விட்டு விற்பனையாகாத ரூ.9.4 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட 10,420.5 சதுர மீட்டர் நிலம் மற்றும் ரூ.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்ட 8,953 சதுர மீட்டர் நிலம் விற்பனைக்கு வருகிறது. இது தவிர 171 சதுர மீட்டர் நிலமும் ஏலத்திற்கு வருகிறது.
மேலும் 2240 சதுர மீட்டர் விவசாய நிலமும் ஏலத்திற்கு வருகிறது. அதன் ஆரம்ப கட்ட விலை 2.3 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 4ஆம் தேதி இந்த சொத்துக்கள் அனைத்தும் ஏலம் விடப்பட இருக்கிறது.
ஏலம் கேட்பவர்கள் தங்களது ஏலத் தொகையை சீலிட்ட கவரில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடத்தல் மற்றும் அன்னியச் செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் இவை ஏலம் விடப்படுகிறது. இந்த சொத்துக்கள் மீதான அனைத்து வழக்கு விசாரணைகளும் முடிந்துவிட்டன.
ஆரம்பத்தில் தாவூத் இப்ராகிம் சொத்துக்களை யாரும் ஏலத்தில் எடுக்க தயங்கினர். அதன் பிறகு இப்போது ஏலம் எடுக்க முன் வருகின்றனர். தற்போது விற்பனை செய்யப்படும் 4 சொத்துக்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ.20 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை சொத்துக்களை ஏலம் விட்ட போது ஆன்லைனிலும், சீலிட்ட கவர் மூலமும், நேரடியாகவும் ஏலம் விட்டனர். ஆனால் இந்த முறை சீலிட்ட கவர் மூலம் மட்டுமே ஏலம் விடுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட குறைந்த விலைக்கு ஏலம் கேட்டாலும் விற்பனை செய்துவிடுவது என்ற முடிவில் அதிகாரிகள் இருக்கின்றனர்.
நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 30 சதவீதம் குறைவான விலைக்கு விற்பனை செய்யவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் இருக்கிறது. எனவே இம்முறை எப்படியும் சொத்து விற்பனையாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த யாரும் அந்த சொத்தை வாங்க தயாராக இல்லை.
கடந்த 2020ஆம் ஆண்டு தாவூத் இப்ராகிம் வாழ்ந்த வீடு உட்பட அவரது குடும்பத்திற்கு சொந்தமான 6 சொத்துக்கள் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. 2017ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது குடும்பத்திற்கு சொந்தமான சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.