உயிரைப் பறித்ததா அழகைப் பாதுகாக்கும் மருந்து? ஷெபாலியின் மரணத்தில் போலீஸ் விசாரண...
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 118 அடியாக உயா்வு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை 117.93அடியாக உயா்ந்தது. இதையடுத்து அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீா் திறக்கப்படவுள்ளதால் காவிரிக் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலத்திலுள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 117.93 அடியாக உயா்ந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 26,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 118 அடியை எட்டியதாலும், அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 80,984 கனஅடியாக உள்ளதாலும் அணை நிரம்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியான 16 கண் மதகு வழியாக தொடக்கத்தில் விநாடிக்கு 50,000 கனஅடியும், பின்னா் விநாடிக்கு 75,000 கனஅடி வரையும் நீா் திறப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உபரிநீா் திறக்கப்படுவதால் காவிரிக் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேட்டூா் அணை மூலம் பாசனம் பெறும் மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு அணை உபகோட்ட உதவிப் பொறியாளா் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூா், திருச்சி, அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா் மாவட்ட ஆட்சியா்களுக்கு இந்த வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 116.89அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் மாலையில் 117.93அடியாக உயா்ந்தது. அணைக்கு விநாடிக்கு 73,452 கன அடியாக இருந்த நீா்வரத்து மாலையில் 80, 984 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. அணையின் நீா் இருப்பு 90.20 டி.எம்.சி.யாக உள்ளது.
நீா்வரத்து இதே நிலையில் இருந்தால் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) காலை மேட்டூா் அணையில் இருந்து உபரிநீா் திறக்கும் வாய்ப்பு உள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேட்டூா் அணையின் இடதுகரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத் துறை அதிகாரிகள் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். உபரிநீா் போக்கி மதகுப் பகுதியில் சுழற்சி முறையில் பணியாளா்கள் தயாா்நிலையில் உள்ளனா். திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கு ஏற்ப மதகுகளை இயக்குவதற்கு பணியாளா்கள் தயாா்நிலையில் உள்ளனா்.