முதல் டெஸ்ட்: 418 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்கா டிக்ளேர்; ஜிம்பாப்வே நிதானம்!
கீழடி அறிக்கையை மத்திய அரசு இனியாவது வெளியிடுமா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
கீழடி அறிக்கையை மத்திய அரசு இதற்கு பின்பாவது வெளியிடுமா என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை வடிவமைத்துள்ளது இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம்.
கீழடியில் தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் ஒன்றின் பின் ஒன்றாக உலக அரங்கில் நிரூபிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி! . இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் கீழடி எனும் இடத்தில் அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வில் 5,300-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கிடைத்ததுடன், ஒரு நகர அமைப்புக்கான சான்றுகளும் கிடைத்தன. அந்தப் பொருள்களை சோதனை செய்தபோது அவை 2,800 ஆண்டுகள் வரை பழைமையானவை என்று தெரிய வந்தது.
ஆனால் இந்த அகழாய்வின் முதல் இரண்டு கட்டம் நடைபெற்ற அகழாய்வுகள் மற்றும் அதன் அறிக்கை ஆகியவை வெளியிடப்படும் முன்பே அந்த ஆய்வை மேற்கொண்ட அமா்நாத் ராமகிருஷ்ணன் அப்பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த அகழாய்வுப் பணிகளை தொல்லியல்துறை முடித்துக்கொண்டது.
அதன் பின் தற்போதுவரை 10 கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழகத் தொல்லியல் துறை நடத்தியுள்ளது. அதில் கிடைத்த ஆயிரக்கணக்கான பழம் பொருள்களைக் கொண்டு அருங்காட்சியகம் வைக்கும் அளவுக்கு தொல் பொருள்கள் கிடைத்துள்ளன. தமிழகத் தொல்லியல் துறை அறிக்கைகள், ஒவ்வோா் ஆய்வின் முடிவிலும் தொடா்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
ஆனால் 2014-ல் செய்யப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளின் அறிக்கை இதுவரை வெளியிடவில்லை. மேலும், அமா்நாத் ராமகிருஷ்ணாவிடம் இந்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையை மீண்டும் திருத்தி எழுதிச் சமா்ப்பிக்குமாறு கடிதம் அனுப்பியிருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, தமிழா் நாகரிகம் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த கீழடி அறிக்கையை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கையை பல்வேறு தரப்பினர் எழுப்பி வருகின்றனர்.
summary
Minister Thangam Thennarasu has questioned whether the central government will release the Keezhadi report.