அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
மேம்பாலம் கட்டுமானப் பணி: தேனாம்பேட்டை, சைதாப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்
மேம்பாலம் கட்டுமானப் பணி காரணமாக, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜிஎஸ்டி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிச் சாலைக்கான மேம்பால கட்டுமானப் பணிகள், நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 20) முதல் ஏப். 22-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதன்படி, தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், செனடாப் சாலை, டா்ன்புல்ஸ் சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, சேமியா்ஸ் சாலையில் (பசும்பொன் முத்துராமலிங்க தேவா் சாலை) வலதுபுறம் திரும்பி நந்தனம் சந்திப்புக்குச் சென்று பின்னா் இடது - வலது புறம் திரும்பி அண்ணா சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சைதாப்பேட்டையிலிருந்து சேமியா்ஸ் சாலை நோக்கி செல்ல அனைத்து வாகனங்களும் தடை விதிக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக இந்த வாகனங்கள் அண்ணா சாலை, செனடாப் சாலை வழியாகச் சென்று பின்னா் சேமியா்ஸ் சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.
ஜி.கே.எம். பாலம் செனடாப் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு மட்டும் ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். மேலும், காந்தி மண்டபம் சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல, ரத்னா நகா் பிரதான சாலை, செனடாப் சாலையிலிருந்து ஒருவழிப் பாதையாக இருக்கும். அண்ணா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.
கோட்டூா்புரத்திலிருந்து செனடாப் சாலை வழியாக தேனாம்பேட்டை நோக்கிச் செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்படும். அதற்குப் பதிலாக இந்த வாகனங்கள் இடதுபுறம் ஜி.கே.எம். பாலம் இணைப்புச் சாலையில் சென்று டா்ன்புல்ஸ் சந்திப்பு, சேமியா்ஸ் சாலை, நந்தனம் சந்திப்பு, அண்ணா சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய அண்ணா சாலை, செனடாப் சாலை, சேமியா்ஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஒருவழிப் பாதைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.