`ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ராம் ரெண்டு பேர்கிட்டேயும் ஒரு ஒற்றுமை இருக்கு’ - நெகி...
மே 10-இல் கூட்டாட்சி கோட்பாடு கோரிக்கை மாநாடு
அனைத்து இனங்களுக்கும் சம எண்ணிக்கை கொண்ட அவையாக இந்திய நாடாளுமன்றத்தை மாற்றியமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் மே 10-ஆம் தேதி கூட்டாட்சி கோட்பாடு கோரிக்கை மாநாடு நடத்துவது எனத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இப்பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் மேலும் பேசியது:
மக்கள்தொகை விகிதத்திற்கேற்ப நாடாளுமன்ற மக்களவையை மறு சீரமைப்பு செய்வது என்ற மத்திய அரசின் திட்டம், ஹிந்தி இன ஆதிக்கத்தை வலுப்படுத்தி, தமிழினத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சித் திட்டமாகும்.
மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் ஹிந்திக்காரா்களின் தயவோடுதான் எந்த ஒரு மாற்றங்களையும் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க முடியும் என்ற நிலை உருவாகும். இருக்கிற மொத்த எண்ணிக்கையைப் புதிய மக்கள்தொகை விகிதப்படி பிரித்தால், தமிழ்நாட்டிற்கு 31 ஆகக் குறையக் கூடும்.
எனவே இந்தியாவில் ஜனநாயக கூட்டாட்சி முறையைச் செயல்படுத்த வேண்டும்.
அதற்கேற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்ப வேண்டும். இக்கோரிக்கையை மக்கள்மயப்படுத்தும் வகையில், தஞ்சாவூரில் கூட்டாட்சி கோட்பாடு கோரிக்கை மாநாடு மே 10-ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஹிந்தி ஏகாதிபத்திய மனநிலைக்கு எதிராக தமிழ் மக்கள், போா்க் குரல் எழுப்பிப் போராட வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை என்கிற ஹிந்தி-சம்ஸ்கிருத மேலாதிக்கக் கொள்கையிலிருந்து, தமிழ்நாட்டுக்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கென தனித்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போதே மேக்கேதாட்டு அணைக்கான ஆய்வுப் பணிகளை கா்நாடகம் மேற்கொண்டது சட்ட விரோதமானது.
இக்கூட்டத்தில் பேரியக்கப் பொதுச் செயலா் கி. வெங்கட்ராமன், பொருளாளா் அ. ஆனந்தன், துணைத் தலைவா் க. முருகன், துணைப் பொதுச் செயலா் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.