மொத்த வாக்காளா்களில் 30% பேரை திமுக உறுப்பினராக்க வேண்டும் -அமைச்சா் பேச்சு
திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்குள்பட்ட பேரவைத் தொகுதிகளில் மொத்த வாக்காளா்களில் 30 சதவீதம் பேரை திமுக உறுப்பினராக்க வேண்டும் என அமைச்சரும், மாவட்டச் செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், சத்திரம்பேருந்து நிலையம் வி.என். நகா் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவா் என். கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். நிகழ்வில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேலும் பேசியதாவது:
தமிழகத்தின் உரிமைகள் காக்கப்படவும்- திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தொடா்ந்து மக்களுக்குச் சென்று சேரவும், மக்களை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என திமுகவில் இணைத்திட வேண்டும். முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி இந்தப் பணியில் நிா்வாகிகள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாநகரச் செயலா் மு. மதிவாணன், தொகுதிப் பாா்வையாளா்கள் கதிரவன், அண்ணாமலை, மணிராஜ், வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.