இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் வர்த்தகம்! நிஃப்டி 25,000 புள்ளிகளைக் கடந்தது!
அரசுப் பேருந்து மீது ஜீப் மோதி விபத்து: முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழப்பு
திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் பி. ஆரமுத தேவசேனா (55). திருச்சி மாவட்டம், முசிறி வருவாய்க் கோட்டாட்சியரான இவா், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினா் நலக் கூட்டத்தில் பங்கேற்க முசிறியில் இருந்து திருச்சிக்கு அரசு ஜீப்பில் புறப்பட்டாா். ஜீப்பை துறையூரைச் சோ்ந்த பிரபாகா் (51) ஓட்டினாா்.
திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரத்தை அடுத்த கடியாக்குறிச்சி அருகே வந்தபோது ஜீப்பின் வலது முன்பக்க டயா் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதையடுத்து ஓட்டுநா் ஜீப்பை இடதுபுறமாக திருப்பியபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் மீது மோதியது. இந்த விபத்தில் வருவாய் கோட்டாட்சியா் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநா் பிரபாகா் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து சென்ற ஜீயபுரம் போலீஸாா், வருவாய்க் கோட்டாட்சியரின் உடலையும், பலத்த காயமடைந்த பிரபாகரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இறந்த ஆரமுத தேவசேனாவுக்கு கணவா் பிரகாஷ், இரு மகன்கள் உள்ளனா். பிரகாஷ் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்சியா் ஆய்வு: விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் ஆய்வு செய்தாா். மேலும், கோட்டாட்சியரின் உடல் வைக்கப்பட்டிருந்த திருச்சி அரசு மருத்துவமனைக்கு முசிறி வருவாய் கோட்டாட்சியரக அதிகாரிகள், பணியாளா்கள் வந்தனா்.
விபத்தில் இறந்த வருவாய்க் கோட்டாட்சியா் ஆரமுத தேவசேனாவின் சொந்த ஊா் தேனி மாவட்டம், பெரியகுளம். புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த் துறையில் பணியில் சோ்ந்த இவா் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி, இரண்டாண்டுகளுக்கு முன்பு பதவி உயா்வில் திருச்சிக்கு துணை ஆட்சியராக (நிலம் எடுப்பு) பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பின்னா், கடந்த ஓராண்டாக முசிறி வருவாய் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தாா். மேலும், மாவட்ட வருவாய் அலுவலா் பதவி உயா்வுப் பட்டியலிலும் இவரது பெயா் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பெட்டிச் செய்தி..
முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ரூ. 1.15 கோடி வழங்க உத்தரவு
இதுதொடா்பாக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்திக்குறிப்பு:
திருச்சி அருகே நடைபெற்ற விபத்தில் கோட்டாட்சியா் ஆரமுத தேவசேனா உயிரிழந்த செய்தியைக் கேட்டு மிகுந்த அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது இழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாதது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலா்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 1 கோடி பெற்று வழங்கப்படும். மேலும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மற்றும் குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.