ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக தேரோட்டம்
ஆற்காடு: ரத்தினகிரி பாலமுருகன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த மே 31-ஆம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி மலையடி வாரத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் யாகசாலை பூஜை , பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் 9-ஆவது நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கி வைத்தாா். முக்கிய வீதிகள் மற்றும் மலை வலம் சென்று மீண்டும் தோ் நிலையை அடைந்தது. திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.
விழாவில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், ராணிப்பேட்டை ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி, மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன், மற்றும் பொதுமக்கள், உபயதாரா்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொழிலதிபா்கள் கலந்து கொண்டனா். போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா். சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.