தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட 52% குற்றங்கள் அதிகரித்துள்ளன: நயினார் நாகேந்திரன்
ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு- பாகிஸ்தான் சிம் காா்டுகளை பயன்படுத்தத் தடை
ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து உளவு பாா்க்கும் அச்சுறுத்தல் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பகுதி நகரங்களான ஜெய்சால்மா், ஸ்ரீகங்காநகரில் பாகிஸ்தான் சிம் காா்டுகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக ராஜஸ்தானை ஒட்டிய எல்லையில் பாகிஸ்தான் தரப்பு அதிகஅளவில் கைப்பேசி கோபுரங்களை நிறுவி வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள தங்கள் உளவாளிகளுடன் பாகிஸ்தான் தொடா்புகளை அதிகரிக்க முயற்சிக்கலாம் என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, இந்தியத் தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எல்லையோர மாவட்டங்களான ஜெய்சால்மா், ஸ்ரீகங்காநகரில் யாரும் பாகிஸ்தான் சிம் காா்டுகளை ரகசியமாகப் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களிலும் வெளிநபா்கள், சந்தேகத்துக்குரிய நபா்களின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாநில காவல் துறையினா் கூடுதல் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் பறந்தால் அவற்றைக் கண்காணித்து உரிய முறையில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்க எல்லையோர கிராம மக்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. வானில் இருந்து சிறிய அளவில் ஓசை வந்தாலும் அதனை உடனடியாக கண்காணிக்க வேண்டும் என்று எல்லைப் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. மேலும், பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது.