ராணுவ பட்ஜெட்டை உயர்த்தும் சீனா!
பாதுகாப்பு மற்றும் பலத்தின் மூலமாகவே அமைதியை நிலைநாட்டமுடியும் என்று தெரிவித்துள்ள சீனா ராணுவ பட்ஜெட்டை இந்தாண்டு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனா தனது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அதன் பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்ஜெட்டை சீன அதிபர் லீ கியாங் வெளியிடவுள்ளார்.
கடந்தாண்டு சீனாவின் ராணுவ பட்ஜெட் 7.2% உயர்த்தப்பட்டு ரூ. 20 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டது. இது இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், சீனா தொடர்ந்து தனது ஆயுதப் படைகளை நவீனமாக்கி வருகின்றது.
விமானம் தாங்கி கப்பல்கள், நவீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் நவீன விமானங்களை வேகமாக கட்டியெழுப்பும் சீன இராணுவத்தின் பட்ஜெட் குறித்த தகவல்கள் உலக அரங்கில் ராணுவ நவீனமயமாக்கலை சந்தேகத்துடன் பார்க்கவைக்கின்றன.
இதையும் படிக்க | ஐரோப்பிய தளங்களிலிருந்து தங்கள் ராணுவத்தைத் திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டம்?
இந்தச் செலவினங்கள் குறித்துப் பேசிய சீன அரசின் செய்தித் தொடர்பாளர் லாவ் கிஞ்சின் ”பாதுகாப்பு மற்றும் பலத்தால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும். வலுவான பாதுகாப்பு கட்டமைப்புகளுடன் சீனா தனது இறையாண்மை, வளர்ச்சி நலன்களை சிறப்பாகப் பாதுகாக்க முடியும்.
உலகின் முக்கிய நாடாக அதன் சர்வதேச பொறுப்புகளைச் சரிவரக் கையாள்வதன் மூலம் உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை சீனா பாதுகாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சீனாவின் ராணுவச் செலவினங்கள் 9 ஆண்டுகளாக ஒற்றை இலக்க வளர்ச்சியை மட்டுமே அடைந்துள்ளது.
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்திற்கான பங்கு பல ஆண்டுகளாக 1.5% அளவிலேயே உள்ளது.