லாலு உள்பட 77 பேருக்குத் தில்லி நீதிமன்றம் சம்மன்!
ரயில்வே வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 77 பேருக்கு தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை, லஞ்சமாக குறைந்த விலைக்குப் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜூன் 7 அன்று, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) லாலு பிரசாத் யாதவ் மற்றும் 77 பேர் மீது வேலைக்கான நிலம் கையகப்படுத்தல் வழக்கில் ஒரு உறுதியான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. சிபிஐ வழக்குப்பதிவின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில் கடந்தாண்டு லாலு பிரசாத், மகன்கள் உள்பட 9 பேருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கில் உண்மைத்தன்மையைக் கண்டறிய லாலு பிரசாத் யாதவ் உள்பட 77 பேருக்கு தில்லி நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கூடுதலாக தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் ஹேமா யாதவ் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சிபிஐயால் தாக்கல் செய்யப்பட்ட இறுதி குற்றச்சாட்டுகள் உள்பட மூன்று குற்றப்பத்திரிகைகளையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி மார்ச் 11 ஆம் தேதி ஆஜராக சிறப்பு சிபிஐ நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டார்.
மூன்று குற்றப்பத்திரிகைகள் மீதான விசாரணையும் கூட்டாக நடத்தப்படும். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் அனைத்து குற்றப்பத்திரிகைகளின் நகல்களையும் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட 77 பேருக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 30 பேர் பொது ஊழியர்கள் மற்றும் 38 வேட்பாளர்கள்.