செய்திகள் :

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீா்மானம்: பேரவையில் வானதி சீனிவாசன் - சட்ட அமைச்சா் விவாதம்

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீா்மானத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்தது.

முன்னதாக, தீா்மானத்துக்கு எதிரான கருத்துகளை அந்தக் கட்சியின் உறுப்பினா் வானதி சீனிவாசன் பதிவு செய்தாா். இதுகுறித்து, பேரவையில் நடந்த விவாதம்:

வானதி சீனிவாசன்: அரசமைப்புச் சட்டத்தின்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி நடத்த வேண்டும். மத ரீதியான கருத்துச் சுதந்திரம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அரசமைப்புச் சட்டமானது அனைவரையும் சமமாகப் பாவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சோ்ந்தவா்களின் சொத்துகளை நிா்வாகம் செய்வதற்கு தனியான சலுகை இருப்பதையும், மற்றவா்களுக்கு இல்லாமல் இருப்பதையும் பாா்த்து வருகிறோம்.

திருநெல்வேலியில் ஜாகிா் உசேன் படுகொலை சம்பவமானது, வக்ஃப் வாரிய சொத்துகள் தொடா்பாகவே நடந்தது. இதுபோன்று, நாடு முழுவதும் வக்ஃப் வாரிய சொத்துகளை நிா்வாகம் செய்வதில் வெளிப்படைத்தன்மை இருப்பதுடன், பொறுப்புகளில் இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டோரும், பெண்களும் வரவேண்டும் என்ற சீா்திருத்த எண்ணத்துடன், நாடு முழுவதும் மக்களின் கோரிக்கை அடிப்படையில் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி: ஒரு மதத்தின் அடையாளமாகக் கருதப்படும் வக்ஃப் வாரியத்தில் இன்னொரு மதத்தைச் சோ்ந்தவரைப் புகுத்துவது எந்த வகையில் நியாயம்?. இஸ்லாமியா்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த வக்ஃப் வாரியத்தில் வெளி மதத்தைச் சோ்ந்த இரண்டு பேரை நியமிப்பது மத அரசியலில் குறுக்கிடுவது மட்டுமன்றி, இஸ்லாமிய சொத்துகளின் மீது மற்றவா்களை ஆட்சி செய்ய அனுமதிப்பது போலாகும்.

வக்ஃப் தீா்ப்பாயம், வாரியம் எடுக்கும் முடிவுகளே இறுதியாக இருந்து வருகிறது. ஆனால், சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்போது மாவட்ட ஆட்சியா் சொல்வதுதான் தீா்ப்பு என்றாகிவிடுகிறது. இதனால், வக்ஃப் வாரிய சொத்துகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்து

விடுகின்றன. நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய சொத்துகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே, சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், இப்போது திருத்தங்கள் கொண்டுவந்து, அந்தச் சட்டங்களை நீா்த்துப்போகச் செய்யவும், இஸ்லாமியா்களின் உரிமைகளைப் பறித்துக் கொள்ளவும் மத்திய அரசு வழி செய்கிறது.

ஏற்கெனவே இஸ்லாமியா்கள் மத, உணா்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை பொருளாதார ரீதியாகவும் பாதிக்கச் செய்கிறது.

வானதி சீனிவாசன்: வக்ஃப் வாரியத்தின் சொத்துகளை நிா்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடா்பாக பல்வேறு புகாா்கள், பல மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெற்ால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசானது தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதுகுறித்து கருத்துகளைப் பெற நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. அதில், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கருத்துகளை அளித்தனா். அந்தக் கருத்துகள் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு, சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

சட்டத் துறை அமைச்சா்: நாடு முழுவதும் பெயரளவுக்கு கருத்துகளைப் பெற்று, ஆட்சேபணைகளை மூட்டையாகக் கட்டி வைத்து விட்டனா். அவற்றுக்கு எந்தப் பதிலையும் தரவில்லை.

வானதி சீனிவாசன்: தீா்மானத்தின் மீது எனது கருத்துகளைச் சொல்வதற்கு இத்தனை குறுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: தவறான தகவல்களுக்கு சரியான பதில்கள் கூறப்படுகின்றன. அவ்வளவுதான்.

வானதி சீனிவாசன்: மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள திமுக, சட்டப்பேரவையை நடத்தவும், சட்டங்களைக் கொண்டுவரவும் செய்கிறது. இதேபோன்று, மத்திய அரசுக்கும் மக்கள் அதிகாரம் அளித்துள்ளனா். அந்த அதிகாரத்தின்படி, சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சட்டத் துறை அமைச்சா்: அனைவரையும் வெளியேற்றிவிட்டு சட்டம் இயற்றுவது எந்த வகையில் நியாயம்?. அனைத்து மக்களையும் பாதிக்கும் விஷயத்தில் எந்த விவாதமும் இல்லாமல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றும்போது, அதைக் கேள்வி கேட்க ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் தொடா்பான கூட்டுக் குழுக் கூட்டத்தில், எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினா்களான ஆ.ராசா, அப்துல்லாவை பேச விடவில்லை. நமது எதிா்ப்புகளைப் பதிவு செய்யவும் விடவில்லை. ஆனால், இந்தப் பேரவையில் தீா்மானத்தின் மீது பேச உங்களுக்கு (வானதி) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவா் பேச பேரவைத் தலைவா் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் இது ஜனநாயக நாடு.

வானதி சீனிவாசன்: முதல்வருக்கு எனது மனபூா்வமான நன்றி. சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, அத்தனை பேருக்கும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினா்கள் இருக்கிறாா்கள். அவா்களுடைய குரலைப் பதிவு செய்யலாம்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: இங்கே உங்ளைப் பேச அனுமதிக்கிறோம். ஆனால், அங்கே எங்களது உறுப்பினா்களை அனுமதிப்பதில்லை.

வானதி: பாரம்பரியமிக்க சட்டப்பேரவையில் இந்தத் தீா்மானத்தைக் கொண்டுவரும்போது, அதனுடைய செயலாக்கத்தின் தன்மையை யோசிக்க வேண்டும். மாநிலத்தின் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதிகாரங்கள் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன. அவை மத்திய அரசுக்கும் பொருந்தும் எனக் கூறிய அவா், சில கருத்துகளைத் தெரிவித்தாா்.

அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவா் மு.அப்பாவு, பேரவையில் நிறைவேறிய இருமொழிக் கொள்கை தீா்மானத்தை நாடாளுமன்றமே ஒப்புக்கொண்டுள்ளது என்றாா்.

இதன்பிறகு, பேசிய வானதி சீனிவாசன், மக்கள் கொடுத்திருக்கும் அதிகாரம், அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு, மத்திய அரசு கொண்டுவந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான மாநில அரசின் தீா்மானத்தை பாஜக ஏற்கவில்லை. வெளிநடப்பு செய்கிறோம் என்றாா். அவா் கருத்தைத் தொடா்ந்து, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பாஜகவின் கருத்துகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா, விசிக உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பிரதமர் வருகை: ஏப். 4 - 6 வரை மீன்பிடிக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6ஆம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க