வடிவேலுவின் கேங்கர்ஸ் டிரைலர்: யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்!
டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபானக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது; அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது; விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்தக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலா், டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோர் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதனிடையே, கடந்த வாரம் வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோர் விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய அமர்வுக்கு விசாரணை மாற்றப்பட்டது.
அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ராஜசேகர் அமர்வில் அமலாக்கத்துறை சார்பில் 47 பக்க பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அமலாக்கத்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கையை சீர்குலைக்கும் விதமாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சோதனையின்போது அதிகாரிகள் உணவருந்த, ஓய்வெடுக்க அனுமதி அளித்த பிறகே வாக்குமூலம் பெறப்பட்டன. பெண் ஊழியர்கள் பாதுகாப்புடன் தான் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். நாங்கள் சோதனைக்கான வாரண்டை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.