Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?
வங்கதேச பொருள்கள் இந்தியா வழியாக ஏற்றுமதி: அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு
வங்கதேச பொருள்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
வங்கதேச ஜவுளி, ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவை இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, இங்கிருந்து பூடான், நேபாளம், மியான்மா் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கடந்த 2020 ஜூன் மாதம் முதல் வங்கதேசம் இந்தியா வழியாக தனது ஏற்றுமதியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. இது வங்கதேசத்தின் ஏற்றுமதியை மிகவும் எளிதாக்கியது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் வங்கதேச பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதன்பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தி வருகிறது.
அங்கு சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்பட்டது. ஹிந்து கோயில்களும் குறிவைத்து தாக்கப்பட்டன. இது இந்தியாவுக்கு எதிரான அந்நாட்டின் மத அடைப்படைவாத அமைப்புகளின் தூண்டுதலில் நடைபெற்ாகத் தெரியவந்தது.
இதுபோன்ற நிகழ்வுகளால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும், பாகிஸ்தான் உடனான உறவையும் வங்கதேசம் வலுப்படுத்தி வந்தது. இது தவிர சீனா உதவியுடன் இந்திய எல்லையை ஒட்டிய தங்கள் பகுதியில் ராணுவ நிலையை உருவாக்கவும் வங்கதேசம் திட்டமிட்டது.
இவை இந்தியாவுக்கு எதிரான அந்நாட்டின் திட்டமிட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
அண்மையில் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, வங்கதேச தலைமை ஆலோசகா் முகமது யூனுஸை சந்தித்துப் பேசினாா். இதன்பிறகு வங்கதேசத்துடன் உறவில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் வங்கதேச பொருள்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது வங்கதேசத்தின் ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. வங்கதேசத்தின் ஏற்றுமதிச் செலவு, பிற நாடுகளுக்கு பொருள்களைக் கொண்டுசெல்லும் காலமும் அதிகரிக்கும்.
ஜவுளி, ஆயத்த ஆடைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய போட்டியாளராகவும் வங்கதேசம் திகழ்கிறது. அந்நாடு இந்தியாவுடன் நல்லுறவைப் பேணாததால் இந்தியா வழியாக அந்நாட்டின் பொருள்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இந்திய ஜவுளி உற்பத்தியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.