செய்திகள் :

வடகிழக்கு பருவமழை: தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் கொட்டிய 17 செமீ மழை; சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்

post image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக வங்க கடலை ஒட்டியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஒரே நாளில் கொட்டிய 17 செ.மீ மழை

இந்நிலையில் வங்க கடலில் நேற்று இரவு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்
கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்

இந்நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது. இதனால் கடலில் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வரையிலான வேகத்தில் காற்றடிக்கக் கூடும் என அறிவிப்பு வெளியானது.

இதனால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று காலைக்குள் கரை திரும்ப வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாததால் அவர்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனிடையே ராமேஸ்வரம் தீவு மற்றும் மண்டபம் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.

தேங்கிய நீரை வெளியேற்றும் பணி
தேங்கிய நீரை வெளியேற்றும் பணி

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தங்கச்சிமடத்தில் 17 செ.மீ மழை கொட்டியது. இது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாட்களில் இருந்து இன்று வரையிலான அதிகபட்ச மழையாகும். இதனால் தங்கச்சிமடம் நெடுஞ்சாலையில் மழை நீர் கடல் போல் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது.

இதே போல் பாம்பனில் 15 செ.மீ, மண்டபத்தில் 14 செ.மீ மழை கொட்டியது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் பெய்த மழையினால் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அம்மா பூங்கா, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

லெட்சுமணதீர்த்தத்தை சூழ்ந்துள்ள மழை நீர்
லெட்சுமணதீர்த்தத்தை சூழ்ந்துள்ள மழை நீர்

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தீபாவளி விடுமுறையைக் கொண்டாட ராமேஸ்வரம் வந்த சுற்றுலாப் பயணிகளும், கோயிலுக்கு வந்த யாத்திரிகர்களும் கடும் அவதிக்குள்ளாயினர்.

இதனிடையே வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் தற்போது ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.

இமாச்சல் நிலச்சரிவில் சிக்கிப் புதைந்த பேருந்து; 18 பேர் பரிதாப பலி; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.விபத்து தொடர்பாக வெளியான தகவலின்படி... மேலும் பார்க்க

தைவானைத் தாக்கிய`ரகசா' புயல்: ஏரி, பாலம் உடைந்து 14 பேர் பலி; 124 பேர் மாயம்

தைவானில் கடந்த (செப். 22) திங்கட்கிழமை முதல் 'ரகசா' புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தைவானின் கிழக்கே ஹுவாலியன் கவுன்டி பகுதியை புயல் தாக்கி இருக்கிறது. அங்கு 70 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவ... மேலும் பார்க்க