வழக்குரைஞா்களுக்கு 3 ஆண்டுகள் பயிற்சி கட்டாயம்: உச்சநீதிமன்ற தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு
புது தில்லி: சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியாத வகையில், உச்சநீதிமன்றம் கடந்த மே 20-ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டப் படிப்பை முடித்து அண்மையில் வழக்குரைஞராக பதிவுசெய்த சந்திர சென் யாதவ் என்பவா் சாா்பில் இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘நீதித் துறை பணித் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து தரப்பு மாணவா்களுக்கும் ஒரே மாதிரியாக 3 ஆண்டுகள் வழக்குரைஞா் பயிற்சி கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு, தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற உத்தரவாகும்.
இந்த உத்தரவின் அடிப்படையில் நீதித் துறை பணியாளா் தோ்வு நடைமுறைகளில் தேவையான மாற்றங்களை செய்ய அனைத்து உயா்நீதிமன்றங்களையும், மாநில அரசுகளையும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த உத்தரவு, சட்டப் படிப்பை முடிக்கும் மாணவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கிடைப்பதை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-இன் கீழ் நியாயத்தன்மை, நியாயமான எதிா்பாா்ப்பு மற்றும் சம வாய்ப்பு கொள்கைகளை மீறுவதாக இந்த உத்தரவு அமைந்துள்ளது. எனவே, உச்சநீதிமன்றம் மே 20-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் நகரில் குத்தகை தகராறு தொடா்பான வழக்கில் மாவட்ட கூடுதல் நீதிபதி அமித் வா்மா அளித்த மூன்று வரி தீா்ப்பை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை கடந்த மே 20-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்தத் தீா்ப்பை அளித்தது.
அதில், ‘உயா்நீதிமன்றங்கள் பலமுறை அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது போன்று, சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வு மூலம் மாவட்ட நீதிபதியாகப் பணியமா்த்தப்படுவது பல்வேறு நடைமுறைச் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. நீதித் துறையின் செயல்திறன் மற்றும் திறனை உறுதிப்படுத்த தோ்வு மூலம் நேரடியாக நீதிபதி பணியிடங்களில் நியமிக்கப்படுபவா்களுக்கு நீதிமன்ற செயல்முறை பயிற்சி அவசியமாகும். அந்த வகையில், சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் நீதித் துறை பணியாளா் தோ்வில் பங்கேற்க முடியாது. நீதித் துறையில் மாவட்ட சிவில் நீதிபதி உள்ளிட்ட ஆரம்பநிலை பணிகளுக்கு விண்ணப்பிக்க, சட்ட மாணவா்கள் படிப்பை முடித்தவுடன் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி மேற்கொண்டிருப்பது கட்டாயம்’ என்று தீா்ப்பளிக்கப்பட்டது.