``விஜய்யை வச்சு ரூ.300 கோடிக்குப் படமெடுத்து ரூ.500 கோடி எடுக்குறது பெரிய விஷயமில்ல" - சுசீந்திரன்
"2K லவ் ஸ்டோரி படத்துல ஒரு தனித்துவமான க்ளைமாக்ஸ் காட்சி இருக்கு. எப்படி 'ஆதலால் காதல் செய்வீர்' படத்துல அந்த பசங்க வாழ்கையோட கதை பயணிக்குமோ அதே மாதிரி தான் இந்தப் படத்துலயும் பசங்க வாழ்க்கைகூடவே பயணம் செஞ்சு அவங்க வாழ்கையில இருக்குற பாசிட்டிவ்வான விஷயம் மட்டுமே இந்தப் படத்துல சொல்லியிருக்கேன்", நம்பிக்கையுடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் சுசீந்திரன்.
`வெண்ணிலா கபடிக் குழு', `நான் மகான் அல்ல', `பாண்டிய நாடு', `ஜீவா' போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சுசீந்திரன். தற்போது `2K லவ் ஸ்டோரி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தத் திரைப்படம் குறித்து படக்குழுவினருடன் விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர், ``இந்தப் படத்துல ஒரு கனெக்ட் இருக்கும். 10 வருஷத்துக்கு முன்னாடி அண்ணன் தங்கச்சி பைக்ல போனாகூட தப்பா பார்த்தாங்க. இப்போ அந்தப் பார்வை மாறி இருக்கு. ஒரு பொண்ணுக்கு பிரெண்டுன்னு ஒரு பையன் இருக்கான். ஒரு பையனுக்கு பிரெண்டுன்னு ஒரு பொண்ணு இருக்கா. பெற்றோர்கள் அதை ஏத்துக்கிட்டாங்க. அப்படி ஒரு ஆரோக்கியமான நிலை இப்ப வந்துருச்சு. என்னோட படங்கள்ல ஒவ்வொரு பிரேம்லயும் என்ன பண்ணனும்னு நான் ஆர்டிஸ்ட்கிட்ட சொல்லிடுவேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/yxxrbm88/VS_YouTube_AjithVijay_SuseethiranDImman2KLoveStory_18_38_.jpg)
அனுபவம் இருக்கிறவங்கக்கிட்ட வசனத்தையும் அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையையும் சொல்லிடுவேன். புதுசா நடிக்கிறவங்கக்கிட்ட கால் எங்க இருக்கணும், கை எங்க இருக்கணும் எல்லாமே சொல்லுவேன். அப்படித்தான் என் முதல் படத்துல இருந்தே பண்ணுவேன். அப்படி நான் இதுவரைக்கும் 50 நடிகர்களுக்கு மேல சொல்லிக்கொடுத்து அறிமுகப்படுத்தி இருக்கேன். ஒவ்வொரு படத்துலயும் 4 பேர அறிமுகம் பண்ணிருவேன். 3 புது அசிஸ்டன்ட் டைரக்டரை சேர்த்துக்குவேன். நம்ம அவங்களுக்கு சொல்லிக் கொடுக்குறோம் அது என் மேல எனக்கு இருக்கக்கூடிய கட்ஸ்!
எனக்குப் பெரிய நடிகர்கள் படம் பண்றதைவிட புது முகங்களை வெச்சு பண்றதுதான் சந்தோஷம். இன்னும் 10 படம் புது முகங்களோட பண்ணனும்னு சொன்னாலும் நான் பண்ணுவேன். நான் புதுமுகங்களை வெச்சு பண்ணின எல்லா படமும் வித்தியாசமான கதைல இருக்கும். ஏன்னா வித்தியாசமான படங்கள் என்னால பண்ண முடியும். அது எனக்கு ஆத்ம திருப்தி கொடுக்கும். நான் `பாயும் புலி' படத்துக்குப் பிறகு பெரிய ஹிட் கொடுக்கல. ஆனா `ஜீவா' படம் இன்னைக்கு வெளிவந்தால் அது 100 கோடி கலெக்ட் பண்ணும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/jnjgcyae/VS_YouTube_AjithVijay_SuseethiranDImman2KLoveStory_3_05_.jpg)
ஏன்னா அப்ப கிரிக்கெட்டுக்கு இருந்த ரீச் வேற இப்ப இருக்குற ரீச் வேற." என்றவர், `` 'சாய்ராட்' ரூ.3 கோடில பண்ணின படம்தான். ஆனால், வசூல்ல அந்தப் படம் ரூ.100 கோடி கலெக்ட் பண்ணுச்சு. என்னால 3, 4, 5 கோடிகள் செலவுல பண்ணி ரூ.500 கோடி கலெக்ட் பண்ற அளவுக்குப் படம் பண்ண முடியும். அதுக்கு எனக்கு கதை கிடைக்கணும். அதை நான் ஸ்க்ரீன்ல கொண்டு வர முடியும். ஸ்க்ரிப்ட் தான் முக்கியம்.
விஜய்யை வெச்சு ரூ.300 கோடிக்கு படம் பண்ணிட்டு ரூ.500 கோடி எடுக்குறது பெருசு இல்ல, 5 கோடில எடுத்துட்டு 500 கோடி எடுக்கணும். அங்க தான் டைரக்டர் நிக்குறான். அந்த முயற்சியை தான் திரும்பத் திரும்ப பண்ணிகிட்டே இருக்கேன். நான் அறிமுகம் பண்ணின ஆர்டிஸ்ட்களெல்லாம் நான் இப்போ கால் பண்ணினால்கூட எனக்கு டேட் கொடுப்பாங்க. விஷ்ணு விஷால், சூரி, ஹரிஷ் உத்தமன், அருள்தாஸ், ராமச்சந்திரன் இவங்க எல்லாம் எந்தப் படத்துல இருந்தாலும் நான் கால் பண்ணா பிச்சுட்டு ஓடி வந்து டேட் கொடுத்துருவாங்க.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/jbl5u62b/VS_YouTube_AjithVijay_SuseethiranDImman2KLoveStory_2_54_.jpg)
புது முகங்கள் வெச்சு ஏன் பண்றீங்க, பெரிய படமா பண்ணுங்க, அஜித்த வெச்சு பண்ணுங்க ,விஜய்யை வெச்சு பண்ணுங்கன்னு சொல்லுவாங்க. அது எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும் கனவு தான். நான் சினிமா பண்ணனும்னுதான் வந்தேன், ரஜினி சார், கமல் சார், அஜித், விஜய் வெச்சு படம் பண்ண வரல. நான் சினிமால இருக்கணும் , அந்த சினிமா என்டர்டெய்ன்மென்ட்டா இருக்கணும். நான் நிச்சயமா 5 கோடி வெச்சு 100 கோடி எடுக்குற மாறி ஒரு படம் பண்ணுவேன். நான் அதுதான் சரியான பாதைன்னு நம்புறேன்". என்றார்.