விண்வெளிக்குச் செல்வதற்கு முன் சுபான்ஷு தனது தாயிடம் என்ன சொன்னார் தெரியுமா?
‘ஆக்ஸிம் - 4’ திட்டத்தின்கீழ் புதன்கிழமை விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, புறப்படுவதற்கு சில மணிநேரத்துக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் பேசியுள்ளார்.
அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம் - 4’ திட்டத்தின்கீழ் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு ஆகியோர் தேர்வாகினர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஸ்பேக்ஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் கடந்த மே 29 ஆம் தேதியே இவர்கள் விண்வெளிக்கு புறப்பட இருந்தனர். ஆனால், தொழில்நுட்பக் காரணங்களால் பலமுறை இவர்களின் பயணம் தள்ளிப்போன நிலையில், இன்று இந்திய நேரப்படி பகல் 12.01 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
தாயிடம் பேசியது...
இந்த நிலையில், விண்வெளிக்கு புறப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, தனது தாயிடம் விடியோ அழைப்பு மூலம் சுபான்ஷு பேசியுள்ளார்.
இந்தியாவின் இருக்கும் அவரின் குடும்பத்தினர், பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்புவதற்காக பூஜைகளை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து, விடியோ அழைப்பில் பங்கேற்றிருந்த சுபான்ஷுக்கு அவரது தாயார், தயிர் மற்றும் சர்க்கரையை ஊட்டினார்.
மேலும், தனது குடும்பத்தினருடன் பேசிய சுபான்ஷு, ”எனக்காக காத்திருங்கள், விரைவில் வருகிறேன்” எனக் கூறியதாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவரது தயார் தெரிவித்தார்.
அவரது சகோதரி கூறியதாவது:
“இது எங்களுக்கு உற்சாகமாக தருணம். மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறோம். விண்வெளிக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது அவர் எங்களுடன் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் பேசினார்.
இந்த தருணத்துக்காக அவர் நீண்ட காலம் காத்திருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தை நாளை மாலை சென்றடையும் சுபான்ஷு குழுவினர், 14 நாள்களுக்கு பிறகு மீண்டும் பூமிக்கு திரும்புவார்கள்.