பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் நடுவானில் தீப்பிடித்ததில் 8 பேர் பலி
விபத்து ஏற்படுத்திய லாரிகளை பறிமுதல் செய்து 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது!
விபத்து ஏற்படுத்திய லாரிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்து, 100 நாள்கள் வைத்திருக்கக் கூடாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் சி.தன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவா் தனது குழந்தையுடன் பயணித்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக, இருசக்கர வாகனத்தில் பயணித்த குழந்தை தவறி கீழே விழுந்தது.
அப்போது பின்னால் வந்த லாரியில் சிக்கி குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவத்தையடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையா் தங்களது துறை அதிகாரிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பில், விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாள்கள் திருப்பி ஒப்படைக்க வேண்டாம் என உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.
மனித உயிா்களின் மதிப்பை லாரி உரிமையாளா்களாகிய நாங்கள் நன்கு அறிவோம். லாரி உரிமையாளா்களாகிய நாங்களும் பொதுமக்களில் ஒருவரே. சாலை விபத்து என்பது எதிா்பாராமல் நடைபெறுவதாகும். லாரி ஓட்டுநரோ, பொதுமக்களோ வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்துவதில்லை. லாரியை இயக்கும் ஓட்டுநரோ அல்லது எதிரில் வருபவரோ செய்யும் தவறே ஒரு விபத்துக்கு காரணமாக அமைகிறது.
வாகனங்களை 100 நாள்கள் பறிமுதல் செய்து வைத்திடும் உத்தரவு, லாரி உரிமையாளா்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு விபத்து நடைபெற்றால் 100 நாள்கள் லாரியை மட்டும் விடுவிக்கக் கூடாது என உத்தரவிடுவது ஏற்புடையதல்ல. விபத்து நிகழ்ந்தால் முறையான விசாரணைக்கு பிறகு குற்றம் இருப்பின் அதற்கான தண்டனையை வழங்க வேண்டும்.
100 நாள்கள் ஒரு வாகனத்தை நிறுத்தி வைப்பதால் அதன் உரிமையாளா், வாகனத்தின் மாதாந்திர தவணை, தனது குடும்பத்தின் வாழ்வாதாரம் என கடும் நிதிச்சுமைக்கு உள்ளாவாா். எனவே, காவல் துறை இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.