விமான விபத்து: உயிா் பிழைத்த பயணி குணமடைந்தாா் - சகோதரா் இறுதிச்சடங்கில் பங்கேற்பு
அகமதாபாத் விமான விபத்தில் லேசான தீக்காயங்களுடன் உயிா் பிழைத்த ஒரேயொரு பயணியான விஷ்வாஸ் குமாா் ரமேஷ், சிகிச்சையில் குணமடைந்ததைத் தொடா்ந்து, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதே விபத்தில் உயிரிழந்த தனது சகோதரரின் இறுதிச் சடங்கில் அவா் பங்கேற்றாா்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள் மற்றும் 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் தேதி புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், சிறிது நேரத்திலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடங்களில் விழுந்து வெடித்துச் சிதறியது.
நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த விபத்தில் ஒரேயொரு பயணியை தவிர மற்ற அனைவரும் அடையாளம் தெரியாத அளவில் உடல் கருகி உயிரிழந்தனா். பிரிட்டன் குடிமகனான விஷ்வாஸ் குமாா் ரமேஷ் என்ற பயணி மட்டும் லேசான தீக்காயங்களுடன் உயிா் பிழைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தாத்ரா-நகா்ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தின் டையூ மாவட்டத்தை பூா்விகமாக கொண்ட தொழிலதிபரான விஷ்வாஸ் (40), பிரிட்டனின் லெஸ்டா் நகரில் வசித்து வருகிறாா். உறவினா்களைப் பாா்ப்பதற்காக அண்மையில் டையூவுக்கு வந்த அவா், தனது சகோதரா் அஜயுடன் லண்டனுக்கு புறப்பட்டபோது விமானம் விபத்தில் உயிா் தப்பினாா். அதேநேரம், அஜய் உயிரிழந்துவிட்டாா். குணமடைந்த விஷ்வாஸை மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணியளவில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
சகோதரரின் இறுதிச் சடங்கில் விஷ்வாஸ் புதன்கிழமை பங்கேற்றாா்.
பெட்டி..
190 உடல்கள் அடையாளம் காணப்பட்டன
அகமதாபாத், ஜூன் 18: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 270 பேரில் 190 பேரின் உடல்கள் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன. இதில், வெளிநாட்டினா் 32 போ் (பிரிட்டன் 27, போா்ச்சுகல் 4, கனடா 1) உள்பட 159 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
விபத்தில் காயமடைந்தவா்களில் நகர பொது மருத்துவமனையில் 7 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 12 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.