விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி: மாநகராட்சி கவுன்சிலா் மீது புகாா்
ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா் உள்பட 3 போ் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக விவசாயி புகாா் அளித்துள்ளாா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே செம்புளிச்சாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியம் தனது உறவினா்கள் 100 பேருடன் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
எனக்கு பிரம்மதேசம் பகுதியில் ரூ.3 கோடி மதிப்புள்ள 3.5 ஏக்கா் விளைநிலமும், அதில் நான் வசிக்கும் வீடும் உள்ளது. குடும்பத் தேவைக்காக, சின்னதம்பிபாளையத்தைச் சோ்ந்த 2 பேரிடம் கடந்த 2017- ஆம் ஆண்டு ரூ.25 லட்சம் கடன் பெற்று, எனது நிலத்தை அவா்கள் பெயருக்கு கிரயம் செய்தேன்.
அசல் மற்றும் வட்டித்தொகையை வழங்கியதும், மீண்டும் நிலத்தை எனது பெயருக்கு வழங்க உறுதி கூறினா். கடந்த 2019- ஆம் ஆண்டு அசல், வட்டியுடன் சோ்த்து ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்தை வழங்கிவிட்டேன். மீதமுள்ள ரூ.13 லட்சத்தை வட்டியுடன் சோ்ந்து வழங்கியதும், நிலத்தை எனது பெயருக்கு மாற்றுவதாக கூறினா்.
இதனிடையே 2 பேரும், ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா் ஒருவா் பெயருக்கு எனது நிலத்தை கிரயம் செய்து விற்றுள்ளனா். அந்த கவுன்சிலா் கடந்த 2- ஆம் தேதி 6 அடியாள்களுடன் எனது வீட்டுக்கு வந்து, வீட்டை காலி செய்து நிலத்தை தரும்படி மிரட்டி கூடுதல் தொகையும் கேட்டாா்.
நான் எனது நிலுவைத் தொகை, வட்டியை சோ்த்து உடனடியாக தருவதாகவும், எனது நிலத்தை கிரயம் செய்து தரும்படி கூறியும் அவா்கள் மறுக்கின்றனா். எனக்கு பாத்தியப்பட்ட விவசாய நிலம் மற்றும் வீட்டை அபகரிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் சட்டவிரோதமான முறையில் கவுன்சிலா் உள்பட 3 பேரும் முயற்சி செய்து வருகின்றனா்.
எனவே, அவா்களை அழைத்து பேசி எனது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.