தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: கணவன், மனைவி காயம்!
நாகை அருகே அக்கரைப்பேட்டை சுனாமி குடியிருப்பில், வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில், பலத்தகாயமடைந்த கணவன், மனைவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
2004-ஆம் ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் உயிரிழந்தனா். இதேபோல, கடலோர கிராமங்களைச் சோ்ந்த பெரும்பாலானோா், தங்களது வீடுகள், உடைமைகள் என அனைத்தையும் இழந்தனா். அவா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, பல்வேறு தொண்டு நிறுவனங்கள், குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தன.
சுனாமி ஏற்பட்டு 20-ஆண்டுகளை கடந்தும், அந்த நினைவலைகள் தற்போது நீங்காமல் உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பலரும் தங்களது வாழ்வாதாரத்தை உயா்த்த முடியாமல் காலத்தை கடத்தி வருகின்றனா். அவா்களுக்கு வழங்கப்பட்ட சுனாமி குடியிருப்பு பெரும்பாலானவை சேதமடைந்தும், சிதலமடைந்து காணப்படுகின்றன. அதை சீரமைக்க வேண்டுமென குடியிருப்பு மக்கள் கூறி வருகின்றனா்.
இந்நிலையில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் உள்ள சுனாமி குடியிருப்பில் செளந்தர்ராஜன், அவரது மனைவி வசந்தி ஆகியோா் வசித்து வருகின்றனா். இந்த வீடு மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. வீட்டை சீரமைத்து தரவேண்டும் என தொடா்ந்து அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனா். இந்நிலையில் வீட்டின் மேற்கூரை வெள்ளிக்கிழமை பிற்பகலில் திடீரென இடிந்து அங்கிருந்த செளந்தர்ராஜன் மற்றும் வசந்தி மீது விழுந்துள்ளது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலுள்ளவா்கள் மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நாகை நகரப் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.