வெற்றி மாறனால் தனுஷுக்கு சங்கடம்?
இயக்குநர் வெற்றி மாறனின் திடீர் முடிவு தனுஷுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
தமிழ் சினிமாவில் சில இயக்குநர்கள் நடிகர்கள் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்திருக்கிறது. முக்கியமாக, இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் - நடிகர் ரஜினிகாந்த்; ஏ. ஆர். முருகதாஸ் - விஜய் உள்ளிட்ட கூட்டணிகள் பெரிதாக கவனிக்கப்பட்டவை.
அந்த வரிசையில், இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெற்றி மாறன் - தனுஷ்.
பொல்லாதவன் படத்தில் இணைந்த வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணி தொடர்ந்து ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வெற்றிப்படங்களாக கொடுத்து ஆச்சரியப்படுத்தினர்.
தனுஷ் தன் திரைவாழ்வில் தடுமாற்றத்தைச் சந்திக்கும்போதெல்லாம் வெற்றி மாறன் தன் இயக்கத்தால் அவருக்கு நல்ல மார்கெட்டை உருவாக்கிக் கொடுத்தார். இருவரும் இணைந்த கடைசி படமான அசுரன் மிகப்பெரிய வசூல் வெற்றியையும் அடைந்தது.
இந்தக் கூட்டணி வடசென்னை - 2 படத்தில் மீண்டும் இணைய வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாகவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்காக, தனுஷும் தயாராகவே இருந்தார்.
இயக்குநர் வெற்றி மாறன் விடுதலை - 2 படத்தை முடித்ததும் வாடிவாசல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படம் இன்னும் ஓராண்டுக்குத் துவங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இதனால், வெற்றி மாறன் வடசென்னை - 2 படத்தின் கதைக்கு முந்தைய கதையைப் படமாக்கத் திட்டமிட்டு வந்துள்ளார். நடிகர் தனுஷை இதில் நடிக்க வைக்கலாம் என்றும் எண்ணியிருக்கிறார். ஆனால், என்ன காரணத்தினாலோ நடிகர் சிம்புவிடம் கதையைச் சொல்ல, எஸ்டிஆர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இம்மாத இறுதியில் இவர்கள் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம். இது, வடசென்னை படத்திற்குத் தொடர்புடைய கதையாகவே உருவாகிறது.
இந்த நிலையில், வெற்றி மாறன் - சிலம்பரசன் கூட்டணி ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தினாலும் தனுஷுக்கு இதில் சிறிய வருத்தம் இருக்கிறது என்றே கூறுகின்றனர்.
காரணம், வடசென்னை ‘அன்பு’ கதாபாத்திரம் தனுஷுக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்திருந்தது. அதன், இரண்டாம் பாகத்திலும் நாம் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அதற்குள் வெற்றி மாறன் சிம்புவை வடசென்னை உலகிற்குள் கொண்டு வருவது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
வடசென்னை முதல் பாகத்தின் கதையை முதலில் நடிகர் சிம்புவுக்காகவே வெற்றி மாறன் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கைவிடப்பட்ட சிம்பு - 49! ஏன்?