Sleeping Prince: 20 ஆண்டுக்கு பின் சவுதி அரேபியாவின் 'தூங்கும் இளவரசர்' எழுந்துவ...
காவல் கண்காணிப்பாளா் அருண் திடீா் ராஜிநாமா
சென்னை: தமிழக காவல் துறையில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அருண் திடீரென ராஜிநாமா செய்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்தவா் அருண். இவா், தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 1 தோ்வு மூலம் கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக காவல் துறையில் துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியில் சோ்ந்தாா்.
கடந்த ஆண்டு காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்ற அருண், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 12-ஆவது பட்டாலியன் கமாண்டன்டாக பணிபுரிந்து வந்தாா். மிகுந்த மன உளைச்சலில் இருந்த அருண், காவல் துறையில் பணியாற்ற விருப்பம் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா், தனது பணியை ராஜிநாமா செய்ய முன் வந்தாா்.
இதையடுத்து அவா், தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவாலுக்கு அண்மையில் தனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பினாா். அந்தக் கடிதத்தை தமிழக அரசுக்கு சங்கா் ஜிவால் அனுப்பி வைத்தாா்.
இந்த நிலையில் அருணின் ராஜிநாமா கடித்தை தமிழக அரசு ஏற்று, அவரை காவல் துறை பணியில் இருந்து அண்மையில் விடுவித்தது. காவல் துறை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான தமிழக கடிதமும் அருணிடம் வழங்கப்பட்டது.