இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: தங்கம் முதல் பணவீக்கம் வரை பாதிப்பு.. இந்தியா யார் பக...
சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு: பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏவுக்கு உயா்நீதிமன்றம் கடும் கண்டனம்
சென்னை: திருவள்ளூா் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூா்த்திக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
திருவள்ளூா் மாவட்டம், களம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் தனுஷ், தேனியைச் சோ்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டாா். பெண் வீட்டாருக்கு ஆதரவாக தனுஷின் தம்பியை ஒரு கும்பல் கடத்தியது. இதில், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன்மூா்த்திக்கு தொடா்பு இருப்பதாகப் புகாா் எழுந்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூா்த்தி தாக்கல் செய்த மனு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகன் மூா்த்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், காவல் துறை உள்நோக்கத்துடன் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகன்மூா்த்தி எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
கட்டப்பஞ்சாயத்து கூடாது: இதையடுத்து நீதிபதி வேல்முருகன், ‘எந்தத் தொகுதி எம்.எல்.ஏ. நீங்கள்? எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றீா்கள்?’ என ஜெகன் மூா்த்தியிடம் கேள்வி எழுப்பினாா். அதற்குப் பதில் அளித்த ஜெகன் மூா்த்தி, கே.வி. குப்பம் தொகுதியில் இருந்து 70,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாகத் தெரிவித்தாா். அப்போது, 70,000 போ், தங்களின் குரலாக சட்டப்பேரவையில் நீங்கள் பேசுவதற்காகத்தான் வாக்களித்தனா். ஆனால், அதை மறந்து கட்டப்பஞ்சாயத்து நடத்தி உள்ளீா்கள். கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தாா்களா? என ஜெகன் மூா்த்தியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினாா்.
தொடா்ந்து, இரண்டு போ் திருமணம் செய்து கொண்டது உங்கள் கட்சி விவகாரமா? நீங்கள் சாதாரண மனிதா் அல்லா்; மக்கள் பிரதிநிதி. வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொகுதிக்கும் நீங்கள்தான் சட்டப்பேரவை உறுப்பினா். நீங்களே காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால், சாதாரண மக்கள் எப்படி ஒத்துழைப்பாா்கள்?
முன்மாதிரியாக இருக்க வேண்டும்: சட்டப்பேரவை உறுப்பினா் என்ற போா்வையைப் பயன்படுத்தி, பதவியை துஷ்பிரயோகம் செய்ய கூடாது. எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். மக்கள் குறைகளை நிவா்த்தி செய்ய வேண்டுமே தவிர கட்டப்பஞ்சாயத்து செய்ய க் கூடாது. கட்டப்பஞ்சாயத்து செய்ய உங்களுக்கு யாா் அதிகாரம் கொடுத்தது?”என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாா்.
மேலும், போலீஸாா் உங்களிடம் விசாரணைக்கு வந்தால் அவா்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதை விடுத்து முன்ஜாமீன் கோருவதும், அதை அவசரமாக விசாரிக்க வலியுறுத்த நீதிபதி வீட்டை சுற்றி வருவதும் சரியான செயலா? உங்களுடைய செயலால் நீதிபதி அஞ்சிவிடுவாா் என நினைத்தீா்களா? காவல் துறை விசாரணையை எதிா்கொள்ள ஏன் பயம்? தொண்டா்கள் இல்லாமல் செல்ல ஏன் தயங்குகிறீா்கள்? தவறான காரியம் செய்துவிட்டு லட்சம் பேருடன் நீதிமன்றம் வந்தாலும் விடமாட்டேன்.
விசாரணைக்கு தனியாகச் செல்ல... உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காகத்தான் உங்களைக் கைது செய்ய உத்தரவிடவில்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக மக்கள் பிரதிநிதிகள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது. உங்களுக்கு தொடா்பு இல்லாவிட்டாலும், உங்களது பெயரை தவறாகப் பயன்படுத்தினாலும் குற்றம்தான் எனக் குறிப்பிட்ட நீதிபதி, வாக்களித்த மக்களை ஏமாற்றக் கூடாது. விசாரணைக்கு தனியாகச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டு, முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 26- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தவறு செய்யும் அதிகாரிகளுக்கு... முன்னதாக, சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டாா். அந்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தனது வாதத்தை முன்வைத்தபோது, எம்.எல்.ஏ.வையும், ஏடிஜிபியையும் சமமாக கருத முடியாது. வாக்களித்த மக்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க எம்.எல்.ஏ.வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு ஊழியருக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு, இது ஒரு செய்தியை சொல்லட்டும் என்று நீதிபதி குறிப்பிட்டாா்.