Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது ...
மக்கள் குறைதீா் கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 295 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 8 பேருக்கு தலா ரூ.6,359 வீதம் ரூ.50, 872 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், 2 செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,000 வீதம் காதொலிக் கருவிகள், பாா்வைத்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.25,000 மதிப்பிலான டெயிசி பிளேயா் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.81, 872 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உரிமைகள் திட்டத்தின்கீழ், சிறகுகள் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள தோ்வு செய்யப்பட்ட முன்களப்பணியாளா்களுக்கு, பணி ஆணையை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சு. காா்த்திகேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.